ராணிப்பேட்டை தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ-வாக இருப்பவர் கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி. இவர், ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க செயலாளராகவும் கட்சிப் பொறுப்பு வகிக்கிறார். கடந்த 1996-ல் முதல் முறையாக ராணிப்பேட்டை தொகுதியில் இருந்து சட்டமன்றத்துக்குத் தேர்வு செய்யப்பட்டார் காந்தி. அதைத்தொடர்ந்து, 2001 தேர்தலில் தோல்வி, 2006-ல் மீண்டும் வெற்றி, 2011-ல் மீண்டும் தோல்வி, 2016 தேர்தலில் வெற்றி என ஒருமுறை வெற்றி, மறுமுறை தோல்வி என தனது அரசியல் வரலாற்றை எழுதிக்கொண்டிருந்தார் காந்தி.
`ராணிப்பேட்டை தொகுதியின் சென்டிமென்ட் இதுதான்’ என்று அரசியல் கட்சிகள் கருதின. ஆனால், அந்த சென்டிமென்ட்டை 2021 தேர்தலில் உடைத்தெறிந்து, சட்டமன்றத்துக்கு 4-வது முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார் காந்தி. இதனால், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சராகும் அதிர்ஷ்டமும் காந்திக்கு கிடைத்தது.

இந்த நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலில், மீண்டும் சீட் எதிர்பார்த்த காந்திக்கு முதலில் ஏமாற்றமே மிஞ்சியது. காந்திக்குப் பதிலாக அவரின் மூத்த மகன் வினோத் காந்தியை வேட்பாளராக அறிவித்தது தி.மு.க தலைமை. இதனால், காந்தி கடும் அதிருப்தியடைந்த நிலையில், ராணிப்பேட்டை தொகுதியில் தி.மு.க வேட்பாளர் அறிமுகக் கூட்டமும் நடத்தப்படாமல் இருந்தது.
`வினோத் காந்தியை வேட்பாளராக ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று உடன்பிறப்புகள் ஒட்டுமொத்தமாக குரல் எழுப்பினார்கள். இதனால், தற்போது வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டு, வினோத் காந்திக்குப் பதிலாக அமைச்சர் காந்திக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கியிருக்கிறது தி.மு.க தலைமை. இது குறித்து, `விகடன்’ நிருபரிடம் பேசிய அமைச்சர் காந்தி, “நான்தான் வேட்பாளர் என்பது உறுதியான தகவல். தலைமை அறிவித்துவிட்டது. நாளை மதியம் 12 மணியளவில், வேட்பு மனு தாக்கல் செய்கிறேன்’’ எனத் தெரிவித்தார்.
இதற்கு மகனின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும்… பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!
