புதுச்சேரி: சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், 6 மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் வாக்குறுதி கொடுத்துள்ளார்.
புதுச்சேரியில் காங்கிரஸ் மற்றும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது; புதுச்சேரிக்கு அடிக்கடி வராதது தவறு தான். தற்போது நான் இங்கு வரும் போது, மனதிற்குள் சிறு வருத்தம் ஏற்பட்டுள்ளது. அது என்னவென்றால், இந்த மாநிலத்தை டில்லியில் இருந்து ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஆட்சி நடத்தப்படுவதுதான். பாஜவின் கொள்கைகள் மற்றும் சித்தாந்தங்களையும் புகுத்த வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர, புதுச்சேரி மக்களின் எண்ணங்களை உள்வாங்கி, அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் அரசாக இந்த அரசு இல்லை.
இங்கிருக்கும் துணைநிலை கவர்னரை வைத்து இந்த மாநிலத்தை ஆட்டிப்படைக்கிறதே தவிர, மக்களின் விருப்பத்தை நிறைவேற்றவில்லை. இங்கு பல ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. தொழில்துறை நசுக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியை அதானிக்கு விற்க பாஜ முயற்சித்து வருகிறது. ஏற்கனவே, காரைக்கால் துறைமுகம் அவருக்கு தாரைவார்க்கப்பட்டு விட்டது. மின்வாரியம் அதானிக்கு விற்கப்பட உள்ளது.
இங்கு போலி மருந்துகள் தயாரிப்பு அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒவ்வொரு ஒப்பந்தத்திற்கு 30 சதவீதம் கமிஷனை அரசு பெற்றுக் கொள்வது அனைவருக்கும் தெரியும். பள்ளிகள், வழிபாட்டு தலங்களுக்கு அருகே மதுக்கடைகள் திறக்க அனுமதிக்கப்படுகிறது. இதனால், சமூக அமைதிக்கு குந்தகம் ஏற்படுகிறது.கோவில்களுக்கு சொந்தமான இடங்கள் கொள்ளையடிக்கப்படுகிறது. புதுச்சேரியில் உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஊழல் நடக்கிறது.
எங்களைப் பொறுத்தவரையில் புதுச்சேரியை துணைநிலை கவர்னர் மன்னர் போல செயல்படுவதை நாங்கள் விரும்பவில்லை. புதுச்சேரியின் மண்ணின் மைந்தர்கள் ஆள வேண்டும் என்பது தான் எங்களின் நிலைப்பாடு. எனவே, ஆட்சிக்கு வந்தவுடன் 6 மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்.
தேர்தல் வாக்குறுதி
• வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை
• அரசு மற்றும் தனியார் துறையில் 30 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்
• புதுச்சேரி பஸ்களில் மகளிருக்கு இலவசப் பயணம்
• அரசு வேலைக்கான வயது உச்சவரம்பு 40ஆக உயர்த்தப்படும்
• ஒரு குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் வரையில் மருத்துவ காப்பீடு
• ஆட்சிக்கு வந்தவுடன் 6 மாதங்களுக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும், இவ்வாறு அவர் கூறினார்.
