நீதிபதி முத்துக்குமரன் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தண்டனை விவரம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்யாததால், ஏப்.2-ம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்திருந்தார்.
இதற்கிடையே, குற்றவாளிகள் 9 பேருக்கும் உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என, உயிரிழந்த ஜெயராஜ் குடும்பத்தினர் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நீதிபதி முத்துக்குமரன் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது, “இது அரிதினும் அரிதான வழக்கு. தந்தை, மகன் இருவரையும் இரவு முழுவதும் காவல்நிலையத்தில் அடைத்து வைத்து, விடிய விடிய தாக்கி, கொடுமையாக கொலை செய்துள்ளனர். ஜெயராஜ், பெனிக்ஸை பழிவாங்கும் நோக்கில் தாக்கியுள்ளனர். அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர். காவல் மரணங்கள் கொடூரமானடு என்று உச்ச நீதிமன்றம் சொல்லியுள்ளது. ஆனாலும், இந்தக் குற்றம் குறைந்தபாடில்லை. அண்மையில் கூட மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் காவல் மரணமடைந்தார்.
சாத்தான்குளம் சம்பவத்தில், காவல் ஆய்வாளர்கள் ஸ்ரீதர் தாக்கியதால் மற்ற காவலர்களும் இணைந்து தாக்கியதாகக் கூறியுள்ளனர். அவர்கள் நினைத்திருந்தால் உயரிதிகாரிகளிடம் கூறி இந்தச் சம்பவத்தை தடுத்திருக்கலாம். ஆனால், குற்றத்துக்கு உடந்தையாக இருந்துள்ளனர். அந்த வகையில் அவர்களும் குற்றவாளிகளே. எனவே, குற்றவாளிகள் 9 பேருக்கும் இந்த நீதிமன்றம் மரண தண்டனை விதிக்கிறது,” என்றார்.
