சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் மூன்று ஆட்டங்களில் தோல்வியை தழுவி உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி. ஐபிஎல் கிரிக்கெட்டில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற அணிகளில் ஒன்றான சிஎஸ்கே எதிர்கொண்டுள்ள இந்த பின்னடைவுக்கான காரணம் என்ன என்பது குறித்து பார்ப்போம்.
கடந்த 2025 ஐபிஎல் சீசனை புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் சிஎஸ்கே நிறைவு செய்தது. இப்போது நடப்பு சீசனிலும் அதே 10-ம் இடத்தில் பூஜ்ஜியம் புள்ளியுடன் சிஎஸ்கே உள்ளது. சேப்பாக்கத்தில் தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் தோல்வி, நடப்பு சீசனில் மூன்று ஆட்டங்களில் தொடர் தோல்வியை தழுவி உள்ளது.
ஆட்ட வியூகத்தில் தப்பு கணக்கா?
இந்த சீசனை முன்னிட்டு ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரண் மாதிரியான ஆல் ரவுண்டர்களை அணியில் இருந்து சிஎஸ்கே விடுவித்தது. சுமார் 43.4 கோடி ரூபாய் உடன் ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி ஏலத்தில் பங்கேற்றது.
தரமான வெளிநாட்டு ஆல்ரவுண்டர், மிடில் ஆர்டர் அல்லது பின்வரிசையில் இறங்கி அதிரடியாக ஆடும் வெளிநாட்டு பேட்ஸ்மேன், வேகப்பந்து வீசும் வெளிநாட்டு வீரர்தான் சிஎஸ்கே நிர்வாகத்தின் டார்கெட்டாக இருந்தது. இருப்பினும் வெளியேறிய சாம் கரண், உடற்தகுதி காரணமாக இந்த சீசனில் சில போட்டிகளில் விளையாடாமல் உள்ள டெவால்ட் பிரேவிஸ், காயத்தால் சீசன் முழுவதையும் தவறவிட்டுள்ள நேதன் எல்லிஸ் ஆகியோருக்கு சரியான மாற்று வீரர்கள் இப்போது சென்னை அணியில் இல்லை.
