புதுடில்லி: மேற்காசிய பிராந்தியத்தில் ஈரான் மற்றும் வளைகுடா நாடுகள் இடையே சண்டை நடந்து வரும் நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார் மற்றும் ஈரான் நாட்டு அமைச்சர்களுடன் தொலைபேசியில் பேசிய நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பேச்சு நடத்தி பதற்றத்தை குறைக்க அனைத்து தரப்பிடமும் கோரிக்கை வைத்தார்.
பாதிப்பு
மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த பிப்., 28ல் போரை துவங்கியது. பதிலடியாக ஈரான் தன் அண்டை நாடுகளான ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், சவுதி அரேபியா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள், கச்சா எண்ணெய் நிலையங்களை தாக்கி வருகிறது.
மேலும், இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு கச்சா எண்ணெய் செல்லும் கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியுள்ளது. இது பொருளாதார ரீதியாக அனைத்து நாடுகளையும் கடுமையாக பாதித்துள்ளது.
இந்த சூழலில், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், கத்தார் வெளியுறவு அமைச்சர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் பின் ஜாசிம் அல்-தானி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோருடன் தொலைபேசியில் பேசினார்.
இதில், இருதரப்பு உறவுகள் மற்றும் மேற்காசிய பிராந்தியத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. ஈரான் நியாயமற்ற தாக்குதலில் ஈடுபடுவதாகவும், குடிநீர், எரிசக்தி கட்டமைப்புகளை சேதப்படுத்துவதாகவும் இரு நாடுகளும் கவலை தெரிவித்தன.
வலியுறுத்தல்
இதற்கிடையே ஈரான் வெளியுறவு அமைச்சர் சையது அப்பாஸ் அராக்சி உடனும் அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார். அப்போது, பிரச்னைகளை அமைதியான முறையில் தீர்க்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியதுடன், உலக வர்த்தகம் மற்றும் எரிசக்தி வினியோகத்துக்கு முக்கியமான கடல் போக்குவரத்து சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டும் என்றார்.
