பெரம்பலுார் மாவட்டம் குன்னம் தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் அமைச்சர் சிவசங்கரை எதிர்த்து, அ.தி.மு.க., கூட்டணி சார்பில் ஐ.ஜே.கே., கட்சியைச் சேர்ந்த சரண்யா, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். அவரை இன்ஸ்டாகிராமில் புரமோட் செய்ய சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று களமிறங்கியுள்ளது.
இதற்காக, வேட்பாளர் சரண்யா, வயல் பகுதியில் வேர்க்கடலை ஆய்வது போலவும், டீக்கடையில் டீ போடுவது போலவும், சுவரில் இரட்டை இலை சின்னம் வரைவது போலவும் நடிக்க, நிறுவன ஊழியர்கள் அதை வீடியோ பதிவு செய்து, இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் ஆக பதிவிட்டு வருகின்றனர்.
மாறாக, தி.மு.க., வேட்பாளர் சிவசங்கரோ, அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற தீயாய் வேலை செய்கிறார். அமைச்சராக இருந்ததால் அத்தொகுதியில் அவர் கால் படாத ஊரே இல்லை எனலாம்.
தேர்தல் களத்துக்கு புதுமுகம், உட்கட்சி பூசல், கூட்டணி கட்சிகளின் ஒத்துழையாமை என பல பிரச்னைகள், வேட்பாளர் சரண்யாவை சுற்றி சுழன்றடிக்கின்றன. இந்நிலையில், இன்ஸ்டாவுக்காக நேரத்தை வீணடிக்கும் அவரால் அவரது கட்சியினரும் நொந்துபோய் உள்ளனர்.
