புதுடில்லி: தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்கக்கோரி எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அளித்த தீர்மான நோட்டீஸ், பார்லி.,யின் இரு சபைகளிலும் நிராகரிக்கப்பட்டது.
முதன்முறை
தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார், மத்தியில் ஆளும் பா.ஜ.,வுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில், தகுதிவாய்ந்த ஏராளமான வாக்காளர்களை நீக்குவதாகவும், காங்., தலைமையிலான, ‘இண்டி’ கூட்டணி குற்றஞ்சாட்டியது.
இதற்கிடையே, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்வதற்கான நோட்டீஸை, லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில், ‘இண்டி’ கூட்டணி எம்.பி.,க்கள் கடந்த மாதம் 12ல் சமர்ப்பித்தனர்.
லோக்சபா எம்.பி.,க்களில் 130 பேரும்; ராஜ்யசபா எம்.பி.,க்களில் 63 பேரும் நோட்டீசில் கையெழுத்திட்டனர். பார்லி., வரலாற்றில், தலைமை தேர்தல் கமிஷனருக்கு எதிராக லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் ஒரே நேரத்தில் பதவி நீக்க நோட்டீஸ் வழங்கப்பட்டது இதுவே முதன்முறை .
பரிசீலனை
ராஜ்யசபாவில் அதன் தலை வராக உள்ள துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனும், லோக்சபாவில், சபாநாயகர் ஓம் பிர்லாவும், எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்த நோட்டீசை பரிசீலித்தனர்.
இறுதியில், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாரை, பதவி நீக்கம் செய்வதற்கான முகாந்திரம் ஏதும் இல்லை என கூறி இருவரும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் சமர்ப்பித்த நோட்டீசை நிராகரித்தனர்.
