நமது நிருபர் கேரளா, அசாம், புதுச்சேரியில் சட்டசபை தேர்தலுக்கான இன்று (ஏப்ரல் 07) மாலை 5 மணியுடன் ஓய்கிறது. இறுதி

நமது நிருபர்

கேரளா, அசாம், புதுச்சேரியில் சட்டசபை தேர்தலுக்கான இன்று (ஏப்ரல் 07) மாலை 5 மணியுடன் ஓய்கிறது. இறுதி நாளான இன்று அனைத்து வேட்பாளர்களும் பேரணி மற்றும் ஊர்வலங்கள் நடத்த உள்ளதால் நகரமே குலுங்கும்.

புதுச்சேரி, அசாம், கேரளா சட்டசபை தேர்தல் வரும் 9ம் தேதி நடக்கிறது. இதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் 15ம் தேதி வெளியானது. உடனடியாக தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான மனு தாக்கல் கடந்த 16ம் தேதி முதல் 23ம் தேதிவரை நடந்தது. 26ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதில், 30 தொகுதிகளில் 294 பேர் களத்தில் உள்ளனர். வெயிலின் தாக்கத்தையும் பொருட்படுத்தாமல், வேட்பாளர்கள் காலை முதல் இரவு வரை வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரித்தனர். வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் கட்சி தலைவர்கள் வரிசையாக புதுச்சேரிக்கு வருகை தந்து பொதுக்கூட்டங்களிலும், ரோடு ேஷாக்கள் நடத்தி ஓட்டு சேகரித்தனர்.

தலைவர்கள் படையெடுப்பு

தே.ஜ., கூட்டணியில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் மன்சுக் மாண்டவியா, அர்ஜூன் ராம் மெக்வால், முதல்வர் ரங்கசாமி, பா.ஜ., தேசிய தலைவர் நிதின் நபின், நடிகை குஷ்பு, வானதி சீனிவாசன், தமிழ்நாடு பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க., பொது செயலாளர் இபிஎஸ், ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இண்டி கூட்டணி தரப்பில், லோக்சபா எதிர்கட்சி தலைவர் ராகுல், காங்., கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கர்நாடக அமைச்சர் தினேஷ்குண்டுராவ், கட்சியின் அகில இந்திய நிர்வாகிகள், தி.மு.க., வில் தமிழக முதல்வர் ஸ்டாலின், பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன், வி.சி., திருமாவளவன், மா.கம்யூ., பாலகிருஷ்ணன், நடிகை ரோகிணி உள்ளிட்டோர் பிரசாரம் மேற்கொண்டனர்.

அதேபோன்று, தனித்து போட்டியிடும் த.வெ.க., வேட்பாளர்களை ஆதரித்து விஜய், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் மேற்கொண்டதால், புதுச்சேரி தேர்தல் களம் அனல் பறந்தது.

இன்று நிறைவு

ஓட்டு பதிவு நாளை மறுநாள் 9ம் தேதி நடக்கிறது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, ஓட்டுபதிவு நடைபெறுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன் பிரசாரத்தை முடிக்க வேண்டும். அதன்படி, இன்று 7ம் தேதி மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு பெறுகிறது. அதற்கு பிறகு எவ்விதமான பிரசாரமும் மேற்கொள்ளப்படுவது சட்ட விரோதமாகும்.

பிரசாரத்திற்கு இன்று ஒரு நாள் மட்டுமே உள்ள சூழ்நிலையில், வீடு வீடாக சென்று ஓட்டு கேட்க வாய்ப்பில்லை. வேட்பாளர்களுக்கு அதற்கான நேரமும் இல்லை. எனவே அனைத்து வேட்பாளர்களும் இன்றைக்கு பிரமாண்டமான பேரணி-ஊர்வலம் நடத்தி தொகுதி முழுவதும் ஒரு ரவுண்ட் வந்து இறுதியாக தங்களின் விருப்பமுள்ள வழிபாட்டு தளங்கள் முன் முடிக்க திட்டமிட்டுள்ளனர். இதனால் புதுச்சேரியின் அனைத்து பகுதிகளும் இன்றைக்கு பேரணிகளால் குலுங்கும் என்பதால், கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி சட்டசபை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரசியல் களம் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவுகிறது. வேட்பாளர்களின் தீவிர ஓட்டு சேகரிப்பு, வாக்காளர்களின் மவுனம் கலந்த ஆர்வமும் இணைந்து புதுச்சேரி ஜனநாயக திருவிழாவை அனைத்து தொகுதிகளிலும் பரபரபாக்கியுள்ளது.

வெளியூர் நபர்களுக்கு தடை

தேர்தல் ஆணைய வழிகாட்டுதலின் படி, பிரசாரம் முடிந்த பின், அந்தந்த தொகுதியின் வாக்காளர் அல்லாத, தேர்தல் பணியில் ஈடுபட்ட வெளியூர் அரசியல் செயல்பாட்டாளர்கள், கட்சி நிர்வாகிகள், பிரசார பணியாளர்கள் என அனைவரும் தொகுதியை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என தேர்தல் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Source link