திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதிக்கான வேட்புமனுத் தாக்கல் களப்பேரங்களுக்கிடையே முடிந்திருக்கிறது. “நல்ல நேரம்” முடிவதற்குள் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பிடிவாதத்தால் திமுக வேட்பாளருடன் மோதல் ஏற்பட்டது. இதில் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சரும், அதிமுக வேட்பாளருமான திண்டுக்கல் சீனிவாசன், நேற்று காலை 11 மணிக்கு தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்யத் திட்டமிட்டிருந்தார்.
மறுபுறம், திமுக தரப்பில் அமைச்சர் ஐ. பெரியசாமியின் மகனும் திமுகவின் வேட்பாளருமான ஐ.பி.செந்தில்குமார், மதியம் 12 மணிக்கு வேட்பு மனுதாக்கல் செய்ய நேரம் ஒதுக்கப்பட்டது.
காலை 11:00 மணியளவில் சுயேச்சை வேட்பாளர்கள் சிலர் மனுத் தாக்கல் செய்ய வந்ததால் வரிசையில் மாற்றம் ஏற்பட்டது. ஆனால், எதிர்பாராத விதமாக சுயேச்சை வேட்பாளர்களின் வருகையினால், திண்டுக்கல் சீனிவாசன் 12:00 மணிக்குத் தாமதமாக வந்து சேர்ந்ததால் குழப்பம் ஏற்பட்டது.
இதற்கிடையில், மதியம் 12:00 மணிக்கு வரவிருந்த ஐ.பி. செந்தில்குமார் முன்கூட்டியே, அதாவது காலை 11:30 மணிக்கே அலுவலகத்திற்கு வருகை தந்தார். அதிமுக வேட்பாளர் திண்டுக்கல் சீனிவாசன் மதியம் 12:00 மணியளவில் அங்கு வந்து சேர்ந்தார்.

இரு முக்கியக் கட்சி வேட்பாளர்களும் ஒரே நேரத்தில் அலுவலக வாசலில் திரண்டதால் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் அவர்களை அறைக்கு வெளியே தடுத்து நிறுத்தினர்.
அப்போது “நல்ல நேரம்” முடிவதற்குள் தான் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறி, திண்டுக்கல் சீனிவாசன் காவல்துறையினரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
