எரிபொருள் விலை உயர்வு எதிரொலி: பாகிஸ்தானில் இரவுநேர லாக் டவுன் அமல்

அமெரிக்கா-ஈரான் போருக்கு மத்தியில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக பாகிஸ்தானில் ஒரு மாதத்தில் 2-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டு உள்ள திடீர் உயர்வு காரணமாக இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாதது என அந்நாட்டின் பெட்ரோலியத்துறை மந்திரி அலி பர்வேஸ் மாலிக் தெரிவித்தார்.

வரலாறு காணாத வகையில் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதற்கு எதிராக எழுந்த கடும் எதிர்ப்புகளையும் நாடு தழுவிய போராட்டங்களையும் தொடர்ந்து பாகிஸ்தான் அரசு பெட்ரோல் விலையை சமீபத்தில் சிறிது குறைத்துள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானில் பகுதி அளவாக பொது முடக்கத்தை அமல்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் அந்நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தலைமை தாங்கினார்.

ஈரான் – அமெரிக்க போரால் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க பாகிஸ்தான் அரசு இரவு நேர பொது முடக்கத்தை நேற்று முதல் அமல்படுத்தி உள்ளது.

அதன்படி கடைகள், வணிக வளாகங்கள் இரவு 8 மணி வரை மட்டுமே செயல்படும்.

உணவகங்கள், திருமண மண்டபங்கள் 10 மணிக்கு மேல் செயல்பட தடை என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மறு அறிவிப்பு வரும் வரை இந்த அறிவிப்பு அமலில் இருக்கும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Source link