சென்னை: உலக வரலாற்றிலேயே இவ்வளவு தோல்வியை சந்தித்த ஒரு அரசியல் இயக்கம் மீண்டும் உற்சாகத்தோடு போட்டியிடுவது இங்கு தான் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
மயிலாப்பூரில் தேர்தல் பிரசாரத்தில் சீமான் பேசியதாவது: ஒராண்டு, இரண்டு ஆண்டுகளாக இல்லை, 15 ஆண்டுகளாக, 10 ஆண்டுகளாக இந்த தேர்தல் அரசியலில், உலக வரலாற்றிலேயே இவ்வளவு தோல்வியை சந்தித்த ஒரு அரசியல் இயக்கம் மீண்டும் உற்சாகத்தோடு போட்டியிடுவது இங்கு தான்.
உலக வரலாற்றிலேயே கிடையாது, இந்திய துணைக் கன்டத்திலும் கிடையாது. முதல் தேர்தலில் 4.5 லட்சம், அந்த வாக்கை வாங்கின ஒரு கட்சி, கரைந்து காணாமல் போய்விடும். இல்லையென்றால், ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்து போய் இருக்கும்.
வாரிசு கிடையாது
மூன்று, நான்கு சீட் கேட்டு இருக்கோம். கூடுதல் சீட் போட்டு கொடுக்க வேண்டும். கேட்கிற தொகுதியை கொடுக்க வேண்டும் என்று சொல்லிட்டு திரிந்துவிடுவார்கள். எங்களுக்கு ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு சின்னத்தை கொடுப்பார்கள். வாக்குக்கு காசு கொடுக்கவில்லை. நானும் முதல்வர் மகனோ, அமைச்சரின் வாரிசு கிடையாது. கொளுத்த பணத்தை வைத்து கொண்டு அதனை பாதுகாக்க கட்சி ஆரம்பிக்கவில்லை. ஜாதி சொல்லவில்லை, மதம் சொல்லவில்லை.
என்ன வித்தியாசம்
சாராயம் ஒரு ஆண்டிற்கு ஐம்பதாயிரம் கோடி. பாலின் சந்தை மதிப்பு ஓராண்டுக்கு மூன்று லட்சம் கோடி. மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்ற கனவு, துடிப்பு உள்ளது. நாங்கள் காசை முன்னிறுத்தவில்லை. ஆக சிறந்த கருத்தை முன்வைக்கிறோம். கோடிக்கணக்கான ரூபாயை தேர்தல் களத்தில் கொட்டவில்லை.
புனிதமான கொள்கைகளை முன் வைக்கிறோம். மாற்றம் எனக் கூறி கட்சி தொடங்குகிறார்கள். லாபம் ஈட்டு தொழிலாக அரசியல் மாறிவிட்டது. அதிமுக, திமுக கூட்டணியில் என்ன வித்தியாசம் உள்ளது. ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் வருகிறது ஆனால் என்ன மாறுதல் நடக்கிறது. இவ்வாறு சீமான் பேசினார்.
