சென்னை: தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை ரூ.462 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம், மதுபானம், போதைப்பொருள் உள்ளிட்டவற்றை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ம் தேதியும் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. மே 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கிறது. தற்போது தேர்தல் களம் அனல் பறக்கிறது. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க, தேர்தல் கமிஷனின் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் இதுவரை பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்பட்ட விபரங்களை தேர்தல் கமிஷன் வெளியிட்டது. இது குறித்து தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியதாவது: தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை ரூ.462 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம், மதுபானம், போதைப்பொருள் உள்ளிட்டவற்றை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளது. 85 வயதிற்கு மேற்பட்ட 2.5 லட்சம் பேர் தபால் வாக்காளர்களாக பதிவு செய்துள்ளனர்.
ஏப்ரல் 13ம் தேதிக்குள் துணை ராணுவப் படையினர் தமிழகம் வருவார்கள். தமிழகத்தில் 5,938 பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள், 3,302 பதற்றம் நிறைந்த இடங்களாக கண்டறியப்பட்டுள்ளன. 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தல் செலவு ரூ.795 கோடி; 2024 பார்லிமென்ட் தேர்தல் செலவு ரூ.1,009 கோடி.தற்போது தமிழக சட்டசபை தேர்தலை நடத்த ரூ.1,302 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.
