70 வயதில் கள்ளக்காதல்: மனைவியின் காதலனை வெட்டிக்கொன்ற முதியவர்

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள நைனி பகுதியை சேர்ந்தவர் ராம்லால் (66). இவரது மனைவி அனார்கலி (65). இந்தநிலையில் பக்கத்து வீட்டை சேர்ந்த காவலாளியான ஹசாரி லாலுக்கும் (70) அனார்கலிக்கும் கடந்த சில ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஹசாரி லாலை ராம்லால் தன் மனைவியிடம் பேசுவதை நிறுத்துமாறு பலமுறை எச்சரித்து உள்ளார். ஆனால் இதை கண்டுகொள்ளாத ஹசாரி லால் அனார்கலியுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ராம்லால் ஹசாரி லாலை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். இதையடுத்து அதிகாலை 2 மணியளவில் யாருக்கும் தெரியாமல் ஹசாரி லாலின் வீட்டிற்குள் கோடாரியுடன் நுழைந்த ராம்லால் அவரை கடுமையாக தாக்கினார். இதில் முகம் மற்றும் தலையில் பலத்த வெட்டு காயமடைந்த ஹசாரி லால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் வீட்டிற்குத் திரும்பி வந்த ராம்லால் கோடாரியை மறைத்து வைத்தார்.

ஹசாரி லால் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்த அவரது மகன் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தார். போலீசார் சி.சி.டி.வி. காட்சிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் ராம்லாலை கைது செய்தனர்.

மேலும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கோடாரியை மீட்டனர். கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று போலீசார் ராம்லாலிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link