கரூர் மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதி. மிகவும் பின்தங்கிய தொகுதியான இந்த தொகுதியில் வரும் கடவூர் பகுதி வளர்ச்சி எதுவும் இன்றி கைவிடப்பட்ட பகுதியாக உள்ளதாக அங்குள்ள மக்கள் புலம்பி வருகின்றனர். இந்நிலையில், இந்த பகுதியில் உள்ள வ.வேப்பங்குடியைச் சேர்ந்த நரேந்திரன் கந்தசாமி என்பவர், அமெரிக்காவில் கணினி தொழில்நுட்ப ஆலோசகராக பணியாற்றி வருகிறார். இவர், இந்தப் பகுதியை மேம்படுத்திட சமூகப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், கடவூர் பகுதியை வளர்ச்சி பாதைக்கு மாற்ற வேண்டுமென்றால், மக்கள் பிரதிநிதிகள் கூடுதல் கவனம் எடுத்துச் செயல்பட வேண்டும் என்று கூறும் இவர், அதற்காக கிருஷ்ணராயபுரம் தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும், கடவூர் ஒன்றியத்தில் செய்ய வேண்டிய திட்டங்களை பட்டியலிட்டுள்ளார்.

இது குறித்து, அவரிடம் பேசினோம்.
“நான்கு பக்கமும் மலைகளால் சூழப்பட்ட கடவூரில் 32 குக்கிராமங்கள் உள்ளன. வெளியில் இருந்து உள்ளே சென்று வர மூன்றே மூன்று வழிகள்தான் உள்ளன. இந்த மலைகளுக்கு இடையில்தான் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார உருவாக்கிய வானகமும், அவரது சமாதியும் அமைந்துள்ளன. ஆனால், இந்தப்பகுதியில் இயற்கை விவசாயம் பெரிதாக யாரும் செய்வதில்லை.
