மதுரை: பிடிஆர் என்ன எம்ஜிஆரா? திமுகவின் பலமே பலமாக இருப்பதாக காட்டுவது தான் என தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சுந்தர்.சி கடுமையாக சாடி உள்ளார்.
மதுரையில் நடந்த தே.ஜ.கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் புதிய நீதிக்கட்சி வேட்பாளர் சுந்தர்.சி பேசியதாவது: சென்னையில் இருந்து நான் கிளம்பும்போது என்னிடம் கேட்டார்கள். எதிர்க்கட்சி வேட்பாளர் இரண்டு முறை எம்எல்ஏவாக இருக்கிறார். இந்த முறை அமைச்சராக இருக்கிறார். ரொம்ப பெரிய குடும்பத்தை சேர்ந்தவர்.
அரசியல் செல்வாக்கு மிக்கவர். கட்சியின் தலைமைக்கு மிகுந்த நெருக்கமானவர். இவரை எதிர்த்து எல்லாம் ஜெயிக்க முடியுமா என்று கேட்டார்கள். நான் பதில் சொல்கிறேன் என்று சொன்னேன். இப்பொழுது உங்களை எல்லாம் பார்க்கும் போது எனக்கு மிகப்பெரிய தைரியம் வந்துவிட்டது.
அந்த கேள்விக்கான பதில் இப்பொழுது தான் எனக்கு தெரிகிறது. அவரை ஜெயிக்கவே முடியாது என்று சொல்வதற்கு எம்ஜிஆரா? பிடிஆர் தானே? திமுகவின் பலமே தங்கள் பலமாக இருப்பது போல் காட்டிக் கொள்வது தான். அவர்கள் பலமாக இருந்தால் எதற்கு கூட்டணி தேவை? ஒன்று சொல்கிறேன் கூட்டமாக இருப்பது எல்லாம் கூட்டணி கிடையாது.
கூடியிருப்பது தான் கூட்டணி. நமது கூட்டணி மாதிரி. அன்பால், கொள்கையால் சேர்ந்த கூட்டணி. அந்தக் கூட்டணியில் குழப்பம், வேட்பாளர்கள் மாற்றம் என பல இருக்கிறது. என் பாசையில் சொல்லப் போனால் பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மென்ட் வீக்கு. இவ்வாறு சுந்தர்.சி பேசினார்.
