அமெரிக்கா ஈரான் போரினால் , போரில் பங்கேற்காத பல நாடுகளும் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதிலும் ஈரான் நாட்டை ஒட்டியுள்ள நமது அண்டை நாடான பாகிஸ்தான் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் போரின் மூலம் பூகோள ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாகிஸ்தான் பலத்த அடி வாங்கி வருகிறது.
பாகிஸ்தானில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதால் அங்கு மின்சார உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மின்சாரத்தை சேமிக்கும் வகையிலும், அதிகப்படியான மின்சார தேவையை கட்டுப்படுத்தும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை பாகிஸ்தான் அரசு விதித்துள்ளது.
புதிய விதிமுறைகளின் படி, அனைத்து வணிக வளாகங்களும் , கடைகளும் இரவு 8 மணிக்குள் கட்டாயமாக மூடப்பட வேண்டும். உணவகங்கள் , திருமண நிகழ்ச்சிகள், மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு இரவு 10 மணி வரையில் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. இந்த விதிமுறைகள் உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இவற்றை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாக் அரசாங்கம் எச்சரித்துள்ளது.
