‘ஆதவ் அர்ஜுனா இதையெல்லாம் மறைச்சிட்டார்..’-பட்டியலோடு வந்த சுயேட்சை வேட்பாளர்

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி மார்ச் 30ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல், நேற்று (06.04.2026) மதியம் 3 மணியுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து ஏப்ரல் 23ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ‘த.வெ.க தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, அவருடைய மனைவி பெயரில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவன பங்குகளை மறைத்து மனு தாக்கல் செய்துள்ளார்’ என சுயேச்சை வேட்பாளர் ஜி.தேவராஜன் என்பவர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

த.வெ.க தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். அதே தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ஜி. தேவராஜன் என்ற சமூக ஆர்வலர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகாரில் ‘தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளரான ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனுவுக்கு எதிராக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் பிரிவு.36(2)ன் கீழ் வேட்பு மனு பரிசீலனையின் போது தான் எழுப்பிய வாய்மொழி ஆட்சேபனைகளின் தொடர்ச்சியாக எழுத்துப்பூர்வமான ஆட்சேபணைகளை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றி கழகத்தால் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா, தனது வேட்புமனுப் படிவங்களில் தகவல்களை வெளியிடாமலும், மறைத்தும் உள்ளதை எனது ஆட்சேபனைகள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

‘Adhav Arjuna hid all this..’ – Independent candidate who came with the list Photograph: (tvk)

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-இன் பிரிவு 33 A மற்றும் B-இன் படி, ஒரு வேட்பாளர் தனது குற்றப் பின்னணிகள், சொத்துக்கள் மற்றும் கடன்கள், மற்றும் அவரது துணைவியார் தொடர்பான முழுமையான, சரியான மற்றும் உண்மையான தகவல்களை வெளிப்படுத்துவது அவரது கடமையாகும். ஆனால், வேட்பாளரான ஆதவ் அர்ஜுனா, முக்கியத் தகவல்களை மறைத்துள்ளார். அதை உங்கள் கவனத்திற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். ஆதவ் அர்ஜுனாவின் மனைவியான டெய்சி, ஆதவ் அர்ஜுனா தற்போது இயக்குநராகப் பணியாற்றி, நிறுவனத்தில் பெரும்பான்மைப் பங்குகளை வைத்திருக்கும் தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனங்களின் பட்டியல் ஆகும். டெய்சி ஆதவ் அர்ஜுனா வைத்திருக்கும் பங்குகள் அவருடைய தனிப்பட்ட சொத்துக்கள் ஆகும். ஆனால் அவை இன்னும் வெளியிடப்படவில்லை.

ஆதவ் அர்ஜுனா தனது தேர்தல் வேட்புமனுப் படிவத்தின் 26-ஆம் படிவத்தில் வெளிப்படுத்தியிருப்பது, முக்கியத் தகவல்களை மறைத்தல் மற்றும் வேண்டுமென்றே வெளியிடாமல் இருத்தல் ஆகும். எனவே, தமிழக வெற்றி கழகத்தால் நிறுத்தப்பட்ட வேட்பாளரான ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட வேண்டும்.

மார்ட்டின் பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட், மார்ட்டின் டவுன்ஷிப் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட், மார்ட்டின் எலைட் புரோமோட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட், மார்ட்டின் டுவெல்லர்ஸ் பிரைவேட் லிமிடெட், மார்ட்டின் ஹை-டெக் கன்ஸ்ட்ரக்ஷன் உள்ளிட்ட 14 நிறுவனங்களின் பட்டியலை அளித்துள்ளார். மேலும், மேற்கூறிய நிறுவனங்களின் பல சொத்துக்கள், PMLA சட்டத்தின் விதிகளின் கீழ் அமலாக்க இயக்குநரகத்தால் (ED) முடக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

உதாரணமாக, டாமினன்ட் டவர்ஸ் அண்ட் டிரேடர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான சுமார் 123 கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனச் சொத்துக்களும், 22 கோடி ரூபாய் மதிப்புள்ள பரஸ்பர நிதிகளும் அமலாக்கத்துறையின் முடக்கத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல், மார்ட்டின் ரியல் எஸ்டேட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான சுமார் 17.7 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் அமலாக்க இயக்குநரகத்தின் (ED) முடக்கத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

மேற்கூறிய உண்மைகள் அனைத்தையும் வேட்பாளர்  ஆதவ் அர்ஜுனா தனது தேர்தல் வேட்புமனுப் படிவங்களில் வேண்டுமென்றே மற்றும் உள்நோக்கத்துடன் மறைத்துள்ளார். எனவே, அவரது வேட்புமனு நிராகரிக்கப்படத் தகுதியானது’ என சுயேட்சை வேட்பாளர் ஜி.தேவராஜன் தெரிவித்துள்ளார்.

Source link