வங்கதேசம் போராட்டத்தை துாண்டியதாக முன்னாள் சபாநாயகர் கைது

டாக்கா: வங்கதேசத்தின் முதல் பெண் சபாநாயகரான ஷிரின் ஷார்மின் சவுத்ரி, டாக்கா போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

நம் அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பரில் மாணவர் போராட்டம் நடந்தது. இதையடுத்து, அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு ராஜினாமா செய்தது. இதையடுத்து, முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றது.

கடந்த பிப்ரவரியில் அந்நாட்டின் பார்லிமென்ட்டுக்கு பொதுத் தேர்தல் நடந்தது. இதில், முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பி.என்.பி., எனப்படும் வங்கதேச தேசியவாத கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றியது.

மாணவர் போராட்டத்தின் போது வன்முறையைத் துாண்டியது உள்ளிட்ட வழக்குகளில், ஷிரின் டாக்கா போலீசாரால் கைது செய்யப்பட்டார். கடந்த 2013ம் ஆண்டு வங்கதேசத்தின் முதல் பெண் சபாநாயாகராக பொறுப்பேற்ற இவர், 2024 செப்டம்பரில் தன் பதவியை ராஜினாமா செய்யும் வரை தொடர்ச்சியாக நான்கு முறை அந்த பதவியில் இருந்தார்.

Source link