சென்னை : தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில், 44 தனி தொகுதிகள் உள்ளன. தனி தொகுதிகளில், ஹிந்து, சீக்கியம், பவுத்தம் ஆகியவற்றில், ஏதாவது ஒன்றை பின்பற்றும் பட்டியலினத்தவரையே போட்டியிட அனுமதிக்க வேண்டும் என, ஹிந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் மனு தாக்கல் செய்து உள்ளார்.
இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது, அர்ஜுன் சம்பத் சார்பில் வழக்கறிஞர் கார்த்திகை பாலன் ஆஜராகி, ”ஹிந்து, சீக்கியம், பவுத்தம் மதத்தை பின்பற்றுபவர்களையே, பட்டியல் இனத்தவர் என, அரசியல் சாசனம் தெரிவித்தது. இதையே, உச்ச நீதிமன்றமும் வலியுறுத்தி உள்ளது,” என்றார்.
அப்போது நீதிபதிகள், ‘ஒரு வேட்பாளர் மீண்டும் மதம் மாறி இருக்கக்கூடும் என்ற சூழலில், வேட்பாளர்கள் சமர்ப்பித்துள்ள ஜாதி சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை, தேர்தல் அதிகாரி எவ்வாறு சரிபார்க்க இயலும்’ என, கேள்வி எழுப்பினர்.
அதற்கு தேர்தல் கமிஷன் தரப்பில் வழக்கறிஞர் நிரஞ்சன் ஆஜராகி, ”பட்டியல் இனத்தவர் என்ற சான்று உண்மையானதா, போலியானதா என்பதை மட்டுமே ஆய்வு செய்ய, தேர்தல் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. அந்த சான்று சரியாக இல்லாவிட்டால் மட்டுமே வேட்பு மனு நிராகரிக்கப்படும்,” என்றார். அதற்கான சுற்றறிக்கையை தாக்கல் செய்தார்.
இதையடுத்து, மனுவுக்கு தேர்தல் கமிஷன் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
