புதுச்சேரி: ''பா.ம.க.,வை சேர்த்துக் கொள்வதாக, எந்த இடத்திலும் தி.மு.க., சொல்லவில்லை,'' என விடுதலை சிறுத்தைகள்

புதுச்சேரி: ”பா.ம.க.,வை சேர்த்துக் கொள்வதாக, எந்த இடத்திலும் தி.மு.க., சொல்லவில்லை,” என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறினார்.

அவர் அளித்த பேட்டி: ஒவ்வொரு தேர்தலிலும், கூடுதல் எண்ணிக்கையில் போட்டியிட வேண்டும் என கட்சித் தொண்டர்கள் விரும்புகின்றனர். அதற்காக, கூட்டணி தலைமையிடம் அழுத்தம் கொடுக்கிறோம். இந்த முறையும், அதே அழுத்தம் தொடரும். பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மீது, வி.சி.,க்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவர், தைலாபுரம் தோட்டத்திற்கு, என்னை அழைப்பார்.

சென்றதும், மணிக்கணக்கில் உரையாடுவர். அவரே, எனக்கு உணவு பறிமாறுவார். உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும் என பலமுறை அறிவுறுத்தியிருக்கிறார். நான் ஈழத் தமிழர்களுக்காக உண்ணாவிரத போராட்டம் இருந்தபோது, விளிம்பு நிலை மக்களுக்கு நீங்கள் அவசியம் என சொல்லி இருக்கிறார். அதனால், அவர் மீது என்றைக்கும் எனக்கு மதிப்பு உண்டு. அதில் எவ்வித மாற்றமும் இருக்காது.

ஆனால் 2011க்கு பின், அவர், அரசியல் ரீதியாக எடுத்த சில முடிவுகள் எங்களுக்கு மட்டும் அல்ல; ஈ.வெ.ரா., இயக்கம் உள்ளிட்ட அனைத்து தரப்பிற்கும் அதிர்ச்சி தரக்கூடியதாக இருந்தது.பா.ஜ., அகில இந்திய அளவில், வெறுப்பு அரசியலை முன்னெடுக்கிறது. பா.ம.க., தமிழகத்தில், தலித்துகளுக்கு எதிராக வெறுப்பு அரசியலை செய்கிறது. இது மிகவும் ஆபத்தானது.

இப்படிப்பட்ட அணுகுமுறையால், அவர்களிடம் இருந்து விலகி நிற்கிறோம். இது கட்சியின் கொள்கை முடிவு. அந்த முடிவை எடுக்கும் நிலைக்கு, அக்கட்சிகள் தான் எங்களை தள்ளின.பா.ம.க.,வை சேர்த்துக் கொள்வதாக, எந்த இடத்திலும் தி.மு.க., சொல்லவில்லை. அதனால், தி.மு.க.,வுக்கு வி.சி.,க்கள் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. பார்லிமெண்டில் கமல் பேசியது, பா.ஜ.,வினருக்கு பிடிக்கவில்லை. அதனால், விமர்சிக்கின்றனர். இவ்வாறு கூறினார்.

Source link