மக்களை பற்றி கவலையில்லை; குடும்பத்தை பற்றி மட்டுமே கவலை: முதல்வர் மீது இபிஎஸ் குற்றச்சாட்டு

சென்னை: ”திமுக ஆட்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது; தனது குடும்பத்தை பற்றி மட்டுமே கவலைப்படுகிறார்” என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை, வேளச்சேரி சட்டசபை தொகுதிக்குட்பட்ட காந்தி ரோடு ஜங்ஷன் பகுதியில் பிரசாரத்தில் இபிஎஸ் பேசியதாவது: மக்களை பற்றி கவலை இல்லை; எப்போது பார்த்தாலும் ஸ்டாலின் தனது குடும்பத்தைப் பற்றி மட்டும் தான் கவலைப்படுவார். திமுக ஆட்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர் கெட்டுவிட்டது.

எங்கு பார்த்தாலும் போதைப் பொருள் விற்பனை, கிராமம் முதல் நகரம் வரை சந்து, பொந்து, வீதிகள் என அனைத்து இடங்களிலும் கஞ்சா விற்பனை அமோகமாக நடக்கிறது. இதை கட்டுப்படுத்த இந்த அரசால் முடியவில்லை. ஏனென்றால் பெரும்பாலும் கஞ்சா விற்பனைக்கு துணை நிற்பது திமுகவை சேர்ந்த நிர்வாகிகள் என்று பரவலாக பேசப்படுகிறது. அதனால் தான் கஞ்சாவை கட்டுப்படுத்த முடியவில்லை.

போதைப்பொருள்

ஒரு டிஜிபி இருந்தார், கஞ்சாவை தமிழகத்தில் தடுப்பதற்கு 2.0 போட்டார். 3.0 போட்டார், 4.0 போட்டார். கடையில் ஓ போட்டுவிட்டு ஓய்வு பெற்றுவிட்டார். ஏனென்றால் கஞ்சா விற்பனையில் திமுக விற்பனையில் ஈடுபட்டிருந்தால் எப்படி போய் தடுக்க முடியும்?

ஆக, இந்த திமுக ஆட்சி இருக்கும் வரை கஞ்சா விற்பனையைத் தடுக்க முடியாது. அதிமுக ஆட்சி மலர்ந்தவுடன் தமிழகத்தில் மூன்றே மாதத்தில் கஞ்சா என்ற போதைப்பொருள் முழுவதுமாக ஒழிக்கப்படும். சட்டத்தின் ஆட்சி நடத்தப்படும். அதிமுக ஆட்சி அப்படித் தான் நடந்தது. அதனால் தான் எங்கள் ஆட்சியில் போதைப்பொருள் நடமாட்டம் இல்லாது இருந்தது.

குடும்ப ஆட்சி

திமுக ஆட்சியில் கருணாநிதியாக இருந்தாலும், ஸ்டாலினாக இருந்தாலும் குடும்ப ஆட்சி தான். நான்கு அதிகார மையம் உள்ளது. ஸ்டாலின், உதயநிதி, துர்கா ஸ்டாலின், சபரீசன் என நான்கு பேர் தமிழகத்தை ஆட்டிப்படைத்துக்கொண்டு இருக்கிறார்கள். மக்களுக்கு துன்பத்தை கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, ஏழை மக்களுக்கான திட்டங்களை கொடுக்க அதிமுக அரசு அனைத்து தேர்தல் அறிக்கையையும் நிறைவேற்றித்தரும். திறமையான ஆட்சியை அதிமுகவால் தான் கொடுக்க முடியும். எனவே நீங்கள் ஆதரிக்க வேண்டிய சின்னம் இரட்டை இலை. இவ்வாறு இபிஎஸ் பேசினார்.

Source link