பின்னர் நீதிபதிகள், ‘இந்த வழக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு. இதில் அவசரம் காட்ட முடியாது. இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை அரசியல் மேடையாக மாற்ற வேண்டாம். இது சிறிய பிரச்சினை, ஊதி ஊதி பெரிய பிரச்சினையாக மாற்றப்பட்டுள்ளது. மேல்முறையீடு மனு மீது இரு நீதிபதிகள் ஏற்கெனவே இறுதி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
அதன் பிறகும் தனி நீதிபதியின் உத்தரவை மிகைப்படுத்துவது ஏன்? இந்த வழக்கில் நீதிமன்றத்தில் யாரும் குரலை உயர்த்தி பேசி நீதிமன்றத்தை மிரட்டும் நோக்கத்தில் பேசக் கூடாது. இந்த வழக்கில் சட்டத்தின் அடிப்படையில் மட்டுமே முடிவெடுக்கப்படும்.
தனி நீதிபதியின் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு தடை விதித்த பிறகு, தனி நீதிபதி விசாரிக்க முடியாது. அந்த வழக்கு தானாக இரு நீதிபதிகள் அமர்வுக்கு வந்துவிடும்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தனி நீதிபதி விசாரிக்க வேண்டுமா அல்லது இரு நீதிபதிகள் அமர்வு விசாரிக்க வேண்டுமா என்பதை இந்த நீதிமன்றம் விசாரித்து உரிய முடிவெடுக்கும் வரை திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் மீது தனி நீதிபதி பிறப்பித்த அனைத்து உத்தரவுகளுக்கும் இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. விசாரணை ஜூன் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது’ என உத்தரவிட்டனர்.
