நமது நிருபர்
ஸ்ரீவில்லிபுத்துாரில் அரசியல் கட்சியினர்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்க துவங்கியுள்ள நிலையில் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர் கண்காணிப்பை தீவிர படுத்தியுள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் தனி சட்டசபை தொகுதியில் வேட்பு மனுக்கள் பரிசீலனை முடிந்த நிலையில், அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் உட்பட 14 பேர் களத்தில் உள்ளனர்.நாளை வாபஸ் பெற கடைசி நாள் என்பதால் மதியம் 3:00 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது.
இந்நிலையில் அ.தி.மு.க., இ. கம்யூ.,, த.வெ.க, நாம் தமிழர், புதிய தமிழகம் கட்சியினர் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தீவிர படுத்தி உள்ளனர். தொகுதியில் பணப்புழக்கம் அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால் பணப்பட்டுவாடா எங்கெல்லாம் நடக்கும் என்ற சந்தேகத்தின் பேரில் ஓட்டல்கள், பெட்ரோல் பங்குகள், கார்களில் தேர்தல் அதிகாரிகள் கண்காணிப்பை தீவிர படுத்தியுள்ளனர்.
தொகுதியில் பல்வேறு இடங்களில் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர ரோந்து சுற்றி வருகின்றனர்.
