மதுரை; ‘‘மதுரை மத்திய தொகுதிக்கு ஆளும்கட்சி அமைச்சராக இருந்தும் திட்டங்களை கொண்டு வர முடியாமல் உங்களை தடுப்பது யார்?, ’’ என்று தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சுந்தர் சி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 10 ஆண்டுகள் மத்திய தொகுதி எம்எல்ஏ-வாக இருந்தும் எதுவும் செய்ய முடியவில்லை என்றால், அவர் ஒதுங்கிக் கொள்ள வேண்டும். ஆளும்கட்சி அமைச்சராக இருந்தே எதுவும் இந்த தொகுதிக்கு செய்ய முடியாவிட்டால் இனி என்ன செய்யப்போகிறார். சில திட்டங்களை நிறைவேற்றமுடியவில்லை. அதற்கு சில அரசியல் நிர்பந்தம், அழுத்தம் இருக்கிறது. அதனை வெளியே சொல்ல முடியவில்லை என்று வருத்தப்படுகிறார்.
இதையெல்லாம், ஒரு எம்எல்ஏ, ஆளும்கட்சி அமைச்சர் சொல்கிற வார்த்தையா?. நிதியமைச்சராக இருந்த ஒருவர், அவரது தொகுதியில் மக்களுக்கான திட்டங்களை கொண்டு வர முடியவில்லை என்றால் மக்கள் யாரிடம் சென்று முறையிடுவது. தனக்கு நேரிட்ட நிர்பந்தம் என்ன என்பதை அமைச்சர் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். அவர் வெளிப்படையானவர், உண்மையை சொல்லக் கூடியவர் என்று சொல்கிறார்கள் அல்லவா, அவர் உண்மையை சொல்ல வேண்டியதுதானே?
