“சீண்டிப் பார்க்கும் வேலையை விஜய் நிறுத்த வேண்டும்”

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, புதிதாக களமிறங்கிருக்கும் தவெக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்த தேர்தலை எதிர்கொள்வதற்காக சென்னை, திருச்சி, புதுச்சேரி ஆகிய நகரங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட விஜய், இன்று (08-04-26) தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய நகரங்களில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

திருநெல்வேலியில் பரப்புரை மேற்கொண்ட விஜய், “திமுக கூட்டணி கலகலத்துப் போய் நிற்கிறது. டாப் தனியாக, பாட்டம் தனியாக, ரீப்பர் தனியாக ஜாயிண்ட் தனியாக நிற்கிறது. தனித்தனியாக எல்லாமே அப்படியே ஒட்ட வைத்துக் கொண்டு இருக்கிறார். கூட்டணி கட்சிக்காரர்களே ஒருத்தருக்கு ஒருத்தர் ஓட்டு போட மாட்டார்கள் போல சூழல் இருக்கிறது. சில பல கோடிகளை கொடுத்து தமிழ்நாடு காங்கிரஸை திமுக பையில் போட்டுக்கொண்டுள்ளது. ஆனால் உண்மையான காங்கிரஸ் நம் பக்கம் நிற்கிறது” என்று பேசினார்.

தமிழ்நாடு காங்கிரஸை தவெக தலைவர் விஜய் விமர்சித்திருந்த நிலையில், அவருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரை நடைபெற்றக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், இன்று நடிகர் விஜய் வெளியிட்டுள்ள கருத்துகள் முற்றிலும் ஆதாரமற்றவை, தவறானவை மற்றும் அரசியல் உள்நோக்கத்துடன் திரித்துக் கூறப்பட்டவை என்பதை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கம் என்பது நூற்றாண்டு பாரம்பரியமும், இந்திய சுதந்திரத்திற்காக தியாக வரலாறும் கொண்ட ஒரு ஜனநாயக இயக்கமாகும். இந்தக் கட்சியை பணம் அல்லது அதிகாரத்தின் மூலம் யாராலும் கட்டுப்படுத்த முடியாது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி, அதன் கொள்கைகளுக்கும், மக்களின் நலன்களுக்கும் ஏற்ப செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைப்பதற்கு த.வெ.க. எத்தகைய திரைமறைவு முயற்சிகளை மேற்கொண்டது என்பதை அனைவரும் அறிவார்கள். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை, நடிகர் விஜய்க்கு என்ன கொள்கை என்று புரியாத நிலையில் அந்த முயற்சிகள் தொடக்கத்திலேயே நிராகரிக்கப்பட்டன. தி.மு.க.வை அரசியல் எதிரியாகவும், பா.ஜ.க.வை கொள்கை எதிரியாகவும் அறிவித்த நடிகர் விஜய், கரூர் சம்பவத்திற்கு பிறகு கொள்கை எதிரி என்று அறிவிக்கப்பட்ட பா.ஜ.க.வை எதிர்த்து எந்தவித கருத்தும் கூற துணிவற்ற நிலையில் இருந்தார். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை தி.மு.க.வோடு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு கொள்கை கூட்டணியாக செயல்பட்டு வருகிறது. 2019, 2021, 2024 ஆகிய அனைத்து தேர்தல்களிலும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்று வருகிறது. இந்நிலையில், த.வெ.க.வோடு எந்த வகையிலும் கூட்டணி வைப்பதற்கான வாய்ப்புகளே இல்லை. ஆனால், காங்கிரசில் ஆள்பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட த.வெ.கவிற்கு விரல் விட்டு எண்ணக் கூடிய ஒருசிலர் தான் சிக்கினார்கள். ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தீவிரமாக பணியாற்றி வருகிறது.

இந்நிலையில், உண்மையான காங்கிரஸ் கட்சியினர் த.வெ.க.வுடன் இருப்பதாக கூறுவதை விட ஒரு அப்பட்டமான பொய் வேறு எதுவும் இருக்க முடியாது. இது அரசியல் உள்நோக்கம் கொண்ட விஷமத்தனமான, ஆதாரமற்ற அவதூறு குற்றச்சாட்டு. எனவே, காங்கிரஸ் கட்சியை சீண்டிப் பார்க்கின்ற வேலையை த.வெ.க. தலைவர் விஜய் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில்மு.க. ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி, மதச்சார்பின்மை, சமூக நீதி மற்றும் ஜனநாயகத்தை பாதுகாத்து வருகிறது. ஆனால், பொதுமக்களை தவறாக வழிநடத்தும் விதமாக த.வெ.க. தலைவர் விஜய் அவதூறு கருத்துகளை வெளியிடுவது பொறுப்பற்ற செயலாகும். ‘உண்மையான காங்கிரஸ் வேறு எங்கோ உள்ளது’ எனக் கூறுவது, காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளை புண்படுத்தும் செயல் மட்டுமல்ல, அரசியல் நாகரீகத்திற்கும் எதிரானதாகும். எனவே, இத்தகைய தவறான மற்றும் ஆதாரமற்ற, அவதூறு கருத்துகளை உடனடியாக திரும்பப் பெற்று, காங்கிரஸ் கட்சியினரிடமும், பொதுமக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்துகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Source link