டெஹ்ரான்:ஈரான் வைத்த 10 அம்சக் கோரிக்கைகளை பரிசீலிப்பதாகக் கூறி, இரண்டு வார போர் நிறுத்தத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஒப்புக்கொண்டதால் மேற்காசியாவில் நிலவி வந்த பதற்றம் தற்காலிமாக தணிந்துள்ளது.
மேற்காசிய நாடான ஈரான் மீது கடந்த பிப்., 28ல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல்களை துவங்கின. இந்தப் போரில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உட்பட முக்கிய தலைவர்கள் பலர் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக மேற்காசியாவில் உள்ள அமெரிக்க படைத் தளங்களை குறிவைத்து தாக்கிய ஈரான், உலகின் முக்கிய எண்ணெய் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியையும் மூடியது. இதனால் உலகப் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து போரை நிறுத்த மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் காலக்கெடு விதித்தார். ‘ஈரான் என்ற நாகரிகம் ஒன்று அழிய போகிறது. அது மீண்டும் திரும்ப கொண்டு வர முடியாத அளவுக்கு இருக்கும்’ என்று கடுமையாக எச்சரித்திருந்தார். அவர் விதித்த கெடு இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 5:30 மணியோடு நிறைவடைய இருந்தது.
முன்னதாகவே எகிப்து, துருக்கி உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து இந்தப் போரை முடிக்க அமெரிக்கா மற்றும் ஈரானிடம், நம் அண்டை நாடான பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து வந்தது. இந்தச் சூழலில், ஈரானுக்கு விதித்த காலக்கெடுவை இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க, டிரம்ப்புக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நேற்று அதிகாலையில் வேண்டுகோள் விடுத்தார்.
இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மூலம் வந்த, ஈரானின், 10 அம்ச திட்டத்தை ஏற்று, கடைசி நேரத்தில் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக டிரம்ப் அறிவித்தார். மேலும், டிரம்ப் இதை இருதரப்பு போர் நிறுத்தம் என்று குறிப்பிட்டார்.
ஈரான் தரப்பும் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, “அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களை நிறுத்தினால், நாங்களும் இரண்டு வாரங்களுக்கு எங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை நிறுத்துவோம். ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் செல்ல ஈரான் ராணுவம் அனுமதிக்கும். ஆனால், ஈரானின் ஆயுதப் படைகளின் கட்டுப்பாட்டிலேயே, ஜலசந்தி இருக்கும்,” என்றார்.
இந்த உடன்பாடுகளின்படி, அடுத்ததாக போர் நிறுத்த ஒப்பந்தம் செய்வது மற்றும் ஈரானின் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் பேச உள்ளன.
