சென்னை: பா.ம.க., சின்னத்தை முடக்கும் விவகாரம் தொடர்பான வழக்கை அவசரமாக விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
பா.ம.க. உட்கட்சி பிரச்னை தொடர்பான சிவில் வழக்கு முடிவுக்கு வரும் வரை, மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்கக் கோரி, ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதி மன்றம், ‘இதுதொடர்பாக சென்னை உரிமையியல் நீதிமன்றம் மூன்று நாட்களில் விசாரித்து முடிவு எடுக்க வேண்டும்’ என, உத்தரவிட்டது.
அதன்படி, மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்கக் கோரி, ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்களை விசாரித்த சென்னை உரிமையியல் நீதிமன்றம், தேர்தல் நடவடிக்கைகள் ஏற்கனவே துவங்கி விட்டதாக கூறி, ராமதாஸ் இடைக்கால மனுக்களை தள்ளுபடி செய்தது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக. தேர்தல் கமிஷனை நாடலாம் என அறிவுறுத்தி இருந்தது. இதை எதிர்த்து ராமதாஸ் தரப்பில் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மாம்பழம் சின்னம் விவகாரம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தை நாட உத்தரவிட்டது. அதன்படி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் முன், ராமதாஸ் தரப்பில் மீண்டும் முறையீடு செய்யப்பட்டது.
அப்போது, தங்கள் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘மனு, பட்டியலிடப்படாமல் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட மாட்டாது’ என, திட்டவட்டமாக தெரிவித்தனர்.
