இஸ்லாமாபாத்: ஈரானுக்கு எதிராக அமெரிக்கா கடும் தாக்குதல் துவங்க இருந்த நிலையில், சீனா கடைசி நேரத்தில் தன்

இஸ்லாமாபாத்: ஈரானுக்கு எதிராக அமெரிக்கா கடும் தாக்குதல் துவங்க இருந்த நிலையில், சீனா கடைசி நேரத்தில் தன் செல்வாக்கை பயன்படுத்தி சண்டையை நிறுத்திக்கொள்ள ஈரானை சம்மதிக்க வைத்துள்ளது. அதன் பின்னரே 10 அம்ச கோரிக்கை பாகிஸ்தான் மூலம் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, இருவார போர் நிறுத்தம் அமலானது.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் பிப்., 28ல் சண்டையை துவங்கின.

ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டது. பதிலுக்கு ஈரான் கச்சா எண்ணெய் வினியோகம் நடக்கும் ஹார்முஸ் ஜலசந்தி பாதையை கட்டுப்பாட்டில் எடுத்து முடக்கியது.

காலக்கெடு

இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து அனைத்து நாடுகளும் பொருளாதார நெருக்கடியில் சிக்கின. இதனால் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரான் உட்கட்டமைப்புகளை மொத்தமாக அழிக்க உள்ளோம் என கூறி, 48 மணி நேர காலக்கெடு விதித்திருந்தார். இது உலக அளவில் பதற்றத்தை அதிகரித்தது.

இந்நிலையில், இரு நாடுகளுக்கு இடையே சண்டையை நிறுத்த பாகிஸ்தான் நேற்று அதிகாலை வரை தீவிர முயற்சி எடுத்தது.

அமெரிக்கா, ஈரான், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி, எகிப்து, சீனாவுக்கு ஒரே இரவில் தொலைபேசி அழைப்புகள் பறந்தன.

இந்த பேச்சில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ராணுவ தலைமை தளபதி அசிம் முனீர், வெளியுறவு அமைச்சர் இஷாக் தர் ஆகியோர் ஈடுபட்டனர்.

அமெரிக்க அதிபர் டிரம்ப், துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், ஈரான் அதிபர் மசூத் பெஷெஸ்கியான், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, சவுதி அரேபியா, துருக்கி, எகிப்து ஆகிய நாடுகளின் தலைவர்கள் பேசினர்.

வற்புறுத்தல்

இரு வார காலம் போர் நிறுத்தம் செய்யலாம் என்ற திட்டத்தை பாகிஸ்தான் முன்வைத்தது. இந்த திட்டத்தில் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் பாதுகாப்பாக செல்ல அனுமதி அளிப்பது உள்ளிட்ட விவரங்கள் இருந்தன.

ஆனால், உண்மையில் இதற்கு ஈரானை சம்மதிக்க வைத்தது சீனா என்ற தகவல் வெளியாகிஉள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ‘ஒரு நாகரிகமே அழியப்போகிறது’ என்று ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த சில மணி நேரங்களுக்குள், ஈரானுடன் சீன வெளியுறவு அதிகாரிகள் நேரடியாக தொடர்பு கொண்டு பேசினர்.

நெருக்கமான செல்வாக்கைப் பயன்படுத்தி, போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொள்ள ஈரானை வற்புறுத்தினர்.

அதன் பின் ஈரான் தரப்பில் இருந்து 10 அம்ச திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு, அது பாகிஸ்தான் மூலம் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டது. இதை பேச்சுக்கான அடிப்படை என்ற அளவில் அமெரிக்கா ஏற்றுள்ளது.

பாகிஸ்தானின் இந்த மத்தியஸ்த முயற்சியின் இறுதி நேரத்தில் சீனாவின் மூத்த வெளியுறவு அதிகாரி ஒருவர் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்சை தொடர்பு கொண்டு பாகிஸ்தான் முன்வைத்த திட்டத்தை ஆதரிப்பதாக தெரிவித்தார்.

இறுதியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இரு வார கால போர் நிறுத்தத்தை அறிவித்தார்.

Source link