சென்னை: ஆந்திராவில் தலைமறைவாக இருந்த,’யூ டியூபர்’ சவுக்கு சங்கர், சென்னை மாநகர போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
சமீபத்தில், ஆலந்துார் மற்றும் சைதாப்பேட்டை காவல் நிலைய போலீசாரால், பண மோசடி வழக்கில், ‘ யூ டியூபர்’ சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மருத்துவ காரணங்களுக்காக, சென்னை உயர் நீதிமன்றம், அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது.
எனினும், அவர் நீதிமன்ற உத்தரவுகளை மீறி, ‘ யூ டியூப்’ சேனலில், தி.மு.க., அரசு மற்றும் அதிகாரிகளை விமர்சித்து, ‘வீடியோ’ வெளியிட்டு வந்தார்.
இதனால், அவரது இடைக்கால ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என, சென்னை மாநகர போலீசார், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
சவுக்கு சங்கர், ஜாமின் நிபந்தனைகளை மீறியதால், அவரை கைது செய்யலாம் என, சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டது.
சங்கர், தலைமறைவாக இருந்து, தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இதனால் அவரை, தலைமறைவு குற்றவாளியாக போலீசார் அறிவித்தனர்.
இந்நிலையில், ஆந்திராவில் தலைமறைவாக இருந்த சவுக்கு சங்கர், தனியார் விடுதி ஒன்றில், சென்னை மாநகர போலீசாரால் நேற்று மீண்டும் கைது செய்யப்பட்டார். அவருடன், அவரது தோழி மாலதி இருந்ததாக கூறப்படுகிறது.
