சென்னை: ‘கூகுள் பே’ செயலியில், ‘பாக்கெட் மணி’ என்ற இடத்தை தொட்டாலே மொத்த பணமும் காலியாகி விடும் என பரவும் தகவலை நம்ப வேண்டாம்’ என, சைபர் குற்றத் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது:
‘கூகுள் பே’ செயலியில் புதிதாக, ‘பீப்பிள்’ என்ற இடத்தில், இதய வடிவில் இரண்டு கைகள் இணைந்து இருக்கும்படி வடிவமைக்கப்பட்டு, ‘பாக்கெட் மணி’ என்ற புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இதன் வாயிலாக, வங்கி கணக்குகள் இல்லாத மகன், மகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களும், ‘கூகுள் பே’ செயலியை பயன்படுத்தி பணம் செலவு செய்ய முடியும். அதற்கு, ‘கூகுள் பே’ செயலியுடன் வங்கி கணக்குகளை இணைத்து இருக்கும் நபர் அனுமதி அளிக்க வேண்டும். அப்போது தான், அவர்களால் பணத்தை செலவு செய்ய முடியும்.
ஆனால், அவர்கள் இஷ்டம் போல செலவு செய்வதையும் கட்டுப்படுத்த முடியும். ஒருவர், தன் மகள், மகன் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு, மாதம், 2,000 ரூபாய் மட்டுமே பாக்கெட் மணி தர நினைக்கிறார் என்றால், அது பற்றி, ‘கூகுள் பே’ செயலியில் பாக்கெட் மணி என்ற இடத்தில் ‘லிமிட் செட்’ செய்து கொள்ளலாம்.
இதன் வாயிலாக அனுமதி பெற்ற நபர்கள், ‘கூகுள் பே’ செயிலில், ‘பின் நம்பர்’ பயன்படுத்தி, 2,000 ரூபாயை செலவு செய்து கொள்ளலாம். அதற்கு மேல் செலவு செய்ய, மீண்டும் அனுமதி பெற வேண்டும்.
கூகுள் பே வாயிலாக பாக்கெட் மணி பெற்ற மகனோ, மகளோ அல்லது குடும்ப உறுப்பினர்களோ, ஒரு கடையில் 50 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கிவிட்டு, ‘கியூ.ஆர்., கோடு ஸ்கேன்’ செய்கின்றனர் என்றால், வங்கி கணக்குகள் உள்ள நபருக்கு, ‘இதை அனுமதிக்கலாமா’ என குறுஞ்செய்தி வரும். அந்த நபர், கூகுள் பே செயலியின் ரகசிய எண்களை உள்ளீடு செய்தால் மட்டுமே பணம் கழிக்கப்படும்.
இந்நிலையில், ‘கூகுள் பே’ செயலியில், ‘பாக்கெட் மணி’ என்ற இடத்தை தொட்டாலே மொத்த பணமும் காலியாகி விடும் என, கடந்த சில நாட்களாக வதந்தி பரவி வருகிறது. இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
