ஒட்டாவா: போதைப்பொருள் கடத்தல் மற்றும் எல்லைத் தாண்டிய சட்டவிரோத செயல்களை தடுக்கும் நடவடிக்கையில் ஒத்துழைப்பு வழங்கும் விதமாக, அதிகாரிகளை நியமிப்பதற்கு இந்தியா – கனடா நாடுகள் முடிவு செய்துள்ளன.
2023ல் காலிஸ்தானி பிரிவினைவாதி கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, இந்தியா – கனடா இடையிலான உறவில் முரண்பாடு ஏற்பட்டு வந்தது. இந்த விவகாரத்தில் சமரசத்தை ஏற்படுத்த இருதரப்பினரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இதன் ஒருபகுதியாக, கனடா தலைநகர் ஒட்டாவில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், கனடா பிரதிநிதி நதாலி ட்ரூயினை நேற்று முன்தினம் (பிப்ரவரி 7)சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது, தேசியப் பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்க விவகாரங்களில் இந்தியா – கனடா ஒன்றிணைந்து செயல்படுவதற்கான புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, போதைப்பொருள் கடத்தல் மற்றும் எல்லைத் தாண்டிய சட்டவிரோத செயல்களை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக, பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்கத் தொடர்பு அதிகாரிகளை நியமிக்க இருநாடுகளும் முடிவு செய்துள்ளன.
மேலும், சைபர் பாதுகாப்பு கொள்கையில் ஒத்துழைப்பை முறைப்படுத்தவும், மோசடி மற்றும் குடிவரவு அமலாக்கம் தொடர்பான விவகாரங்களில் பேச்சுவார்த்தைகளை தொடரவும் இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன.
