சிறுவர்கள், முதியவர்கள் அதிகம் பாதிப்பு – வெயிலின் ருத்ர தாண்டவத்திலிருந்து தப்ப மருத்துவரின் பயனுள்ள டிப்ஸ்

சமீப காலமாக வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. வழக்கத்துக்கு மாறாக இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக உள்ளது. அக்னி நட்சத்திர மாதமான மே மாதம் வருவதற்கு முன்பே வெயில் ருத்ரதாண்டவத்தை தொடங்கியுள்ளது. இதே நிலை தொடர்ந்தால், வரும் நாட்களில் மிகவும் சிரமம் ஏற்படும் என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.

வெயிலின் பிடியில் சிக்குவது மட்டுமல்லாது, கோடைகாலத்தில் பல நோய்கள் மக்களை பாதிக்க வாய்ப்பு இருப்பதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். கோடைகாலத்தில் உடலில் நீர்சத்து குறைபாடு அதிகமாக ஏற்படும். போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதே இதற்கு காரணம்.

இதுகுறித்து கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி டீன் கவிதா கூறுகையில்,

சின்னம்மை, வெப்ப வாதம் மற்றும் தோல் நோய்கள் போன்றவை வெயில் காலங்களில் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தல்களாக உள்ளன. கோடை காலங்களில் அளவுக்கு அதிகமான வெப்பம் உடலில் ஏற்படுவதால் வெப்பவாதம் உண்டாகிறது. இதனால் மயக்கம் ஏற்பட்டு உடலின் பாகங்கள் செயலிழக்கசெய்து உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதுதவிர, சின்னம்மை போன்ற வைரஸ் நோய்களும் வெப்பத்தில் உண்டாகும். இதனால் உடலில் பல இடங்களில் அரிப்புடன் தடுப்பு போன்ற கரும்புள்ளிகள் ஏற்பட்டு நாளடைவில் அவை தழும்புபோல் பதிந்து விடுகிறது. இது ஒரு வாரம் வரை உடலில் இருக்கும். சிலருக்கு இது பல நாட்கள் வரை இருக்கவும் வாய்ப்புள்ளது.

மேலும் வெயில் காலத்தில் அதிகமானோருக்கு கண் எரிச்சல் உண்டாகும். இதனால் கண் உறுத்துதல், அடிக்கடி கண்களில் நீர் வருதல், கண்களில் வலி போன்றவை ஏற்படுகிறது. உடலில் அதிகமாக வியர்வை வெளியேறும். இதன்காரணமாக வியர்குரு, தோல் அலர்ஜி போன்றவை ஏற்படும். உடலில் எரிப்பு ஏற்பட்டு அசவுகரியமான உணர்வை உண்டாக்கும்.

பாதுகாக்கும் முறை

உடலுக்கு நீர்சத்து அவசியமானது. கோடை காலத்தில் அதிகப்படியான வியர்வை வெளியேறும். இதனால் உடலில் நீர்இழப்பு நடைபெறும். குழந்தைகள் மற்றும் முதியர்வகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தினமும் 3 முதல் 5 லிட்டர் தண்ணீர் குடிப்பதனால் உடலில் நீர் இழப்பு ஏற்படுவதை தடுக்கலாம். வேலைக்கு செல்லும்போதும், வெளியில் செல்லும்போதும் தண்ணீர் எடுத்துசெல்ல வேண்டும். மேலும் இயற்கையான பழங்களை சாப்பிடுவது உடலுக்கு மேலும் குளிர்ச்சி அளித்து உடலில் வெப்பம் அதிகரிப்பதை கட்டுப்படுத்தும். தர்பூசணி போன்ற நீர் நிறைந்த பழங்கள் சாப்பிடலாம். வெளியில் சென்றால், வீட்டிற்கு வந்ததும் கை, கால்களை நன்றாக கழுவுவது வைரஸ் நோய்களில் இருந்து பாதுகாக்கும்.

இவ்வாறு கூறினார்.

Source link