புதுடில்லி: 'சட்டசபையில் பெண்களுக்கான இடஒதுக்கீடு என்பது காலத்தின் கட்டாயம். இந்த இடஒதுக்கீட்டைக் கொண்டு

புதுடில்லி: ‘சட்டசபையில் பெண்களுக்கான இடஒதுக்கீடு என்பது காலத்தின் கட்டாயம். இந்த இடஒதுக்கீட்டைக் கொண்டு வருவதில் ஏற்படும் எந்தவொரு தாமதமும் மிகுந்த துரதிர்ஷ்டவசமானது,’ என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை; மகளிர் இடஒதுக்கீட்டை மேம்படுத்தும் முக்கிய மசோதாவை நிறைவேற்ற வரும் ஏப்ரல் 16ம் தேதி பார்லி கூடுகிறது. இதனை சட்டப்பூர்வ நடவடிக்கை என்பதை விட, நம் நாட்டின் கோடிக்கணக்கான பெண்களின் விருப்பத்தின் பிரதிபலிப்பாகும். பெண்கள் முன்னேறும்போது சமூகம் முன்னேறுகிறது என்ற உறுதிப்பாடு தான் இது. இந்திய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் பெண்கள். தேசத்திற்கான அவர்களின் பங்களிப்பு மகத்தானது.

இன்று அறிவியல், தொழில்நுட்பம், தொழில்முனைவு, விளையாட்டு, இசை மற்றும் கலை என ஒவ்வொரு துறையிலும் பெண்கள் முன்னணியில் உள்ளனர். கடந்த பல ஆண்டுகளில், பெண் வலிமைக்காக கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவற்றில் பெரும் முன்னேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருப்பினும், அரசியலில் அவர்களின் பிரதிநிதித்துவம் போதுமானதாக இல்லை.

எனவே, 2029 லோக்சபா தேர்தலும், வரும் மாநிலச் சட்டசபை தேர்தல்களும் மகளிர் இடஒதுக்கீட்டுடன் நடத்தப்படுவது அவசியமாகும். சட்டசபையில் பெண்களுக்கான இடஒதுக்கீடு என்பது காலத்தின் கட்டாயம். இந்த இடஒதுக்கீட்டைக் கொண்டு வருவதில் ஏற்படும் எந்தவொரு தாமதமும் மிகுந்த துரதிர்ஷ்டவசமானது.

இந்த முடிவை தாமதப்படுத்துவது என்பது நமது ஜனநாயகத்தின் வலிமையைத் தாமதப்படுத்துவதாகும். இது ஒரு அரசுக்கோ அல்லது கட்சிக்கோ சொந்தமானது அல்ல. இது ஒட்டுமொத்த தேசத்திற்கும் சொந்தமானது. நமது பெண் சக்திக்கு நாம் செய்ய வேண்டிய கடமை இது. எனவே, கட்சிப் பாகுபாடின்றி அனைத்து கட்சி எம்பிக்களும் இதற்கு ஆதரவளிக்க வேண்டும், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Source link