தென் மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும், முதல்வரின் மருமகன் சபரீசன் தி.மு.க நிர்வாகிகளிடம் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார். தேர்தல் நேரத்தில் சபரீசன் மேற்கொண்ட இந்த விசிட் தி.மு.க வினரால் உன்னிப்பாக கவனிக்கபடுகிறது.
தி.மு.க தலைவரும் முதல்வருமான ஸ்டாலினின் மருமகன் சபரீசன், கடந்த வாரம் வில்லிவாக்கத்தில் நடந்த தி.மு.க தேர்தல் பிரசார ஆலோசனை கூட்டத்தில் நேரடியாக பங்கெடுத்தார். தி.மு.கவின் அதிகாரபூர்வ நிகழ்விலோ, தேர்தல் பிரசார கூட்டங்களிலோ தலைக்காட்டாமல் இருந்த சபரீசனின் இந்த மூவ்வை தி.மு.க வினரே ஆச்சர்யத்தோடு பார்த்தனர். ஆனால், வில்லிவாக்கம் தொகுதி தி.மு.க வேட்பாளர் கார்த்திக் மோகன், சபரீசனின் நண்பர் என்பதால் நண்பருக்காக இந்த பிரசார கூட்டத்திற்கு வந்திருக்கிறார் என்றார்கள் தி.மு.க வினர்.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தென் மாவட்டங்களில் சபரீசன் தொடர் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். கன்னியாக்குமரி, துாத்துக்குடி, திருநெல்வேலி என மூன்று மாவட்டங்களில் உள்ள தி.மு.க நிர்வாகிகளுடன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தி.மு.க வேட்பாளர்களை அழைத்து நேரடியாக தொகுதி நிலவரம் குறித்து கேட்டுள்ளார்.
மேலும், சில தொகுதிகளில் தி.மு.க-வுக்கு நெருக்கடியாக இருந்துள்ளது. குறிப்பாக கன்னியாக்குமரி மாவட்டத்தில் இரண்டு தொகுதிகள் தி.மு.க கூட்டணிக்கு நெருக்கடியாக இருப்பதாக அங்குள்ள உடன்பிறப்புகள் சொல்லியுள்ளார்கள். அதனை கேட்டுக்கொண்ட சபரீசன், அதை சரிகட்ட என்ன செய்ய வேண்டும்? என்று நிர்வாகிகளிடம் பேசியிருக்கிறார்.
