நமது நிருபர்
சென்னை தலைமை செயலகம் முன் திமுக கொடியை தீயிட்டு எரித்த போலீஸ் ஏட்டு கோதண்டபாணி கைது செய்யப்பட்டார்.
சென்னை ஓட்டேரி போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டு ஆக கோதண்டபாணி பணிபுரிந்து வருகிறார். அவரது மகளுக்கு ஏற்பட்ட கால்வலி பிரச்னைக்கு, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு இருக்கிறார். இதில் பாதிப்பு ஏற்பட்டதில், மகளின் கால் பாதம் அகற்றப்பட்டுள்ளது.
மகளுக்கு தவறான சிகிச்சை அளித்ததால் தான் இந்த பாதிப்பு ஏற்பட்டதாக, சில ஆண்டுகளாக தொடர்ந்து புகார் கூறி வருகிறார். இன்று காலை *:00 மணிக்கு மகளுடன் தலைமை செயலகத்துக்கு கோதண்டபாணி, போலீஸ் சீருடையில் வந்தார். காவலுக்கு இருந்த போலீசார், அசட்டைாக இருந்த நேரத்தில் திமுக கொடியை தீயிட்டு எரித்தார்.
இதைக்கண்டு அங்கு பணியில் இருந்த போலீசார் பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்தனர். பற்றி எரிந்த திமுக கொடியை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். உடனடியாக ஏட்டு கோதண்டபாணியை கைது செய்தனர். தன்னை தடுத்த போலீசாரிடம், அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கைது செய்யப்பட்ட கோதண்டபாணியிடம் விசாரணை நடந்து வருகிறது.
தலைமை செயலகம் முன் சீருடையில் இருந்த போலீஸ்காரர் ஒருவர், திமுக கொடியை தீ வைத்து எரித்த சம்பவம், அலுவலர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.
