பத்து ஆண்டுகளாக நீடித்த ஒரு திருமணப் பிரச்னைக்கு, ‘மகாபாரதப் போர்’ என வர்ணித்து, தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி முற்றுப்புள்ளி வைத்துள்ளது உச்ச நீதிமன்றம்.
பிரிந்து வாழ்ந்த தம்பதிக்கு விவாகரத்து வழங்கி, கணவர் தன்னுடைய மனைவிக்கு ஒரே தவணையாக ரூ.5 கோடியை ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு, இருவர் மீதும் இருந்த அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்துள்ளது.
ஒரு தசாப்த காலமாக நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டி, கண்ணீருடன் நீதி கேட்டுப் போராடிய ஒரு பெண்ணின் வாழ்க்கையில், இந்தத் தீர்ப்பு ஒரு புதிய விடியலைக் கொண்டு வந்துள்ளது. நடைமுறையில் இந்தத் திருமணம் முற்றிலுமாக இறந்துவிட்டது என்று குறிப்பிட்ட நீதிமன்றம், அரசியலமைப்பின் 142-வது பிரிவின் கீழ் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்தப் பத்தாண்டு காலப் போராட்டத்திற்கு ஓர் அமைதியான முடிவை வழங்குவதே முழுமையான நீதியாக இருக்கும் என்று தீர்ப்பளித்துள்ளது.
வழக்கின் பின்னணி என்ன?
இந்தத் தம்பதிக்கு 2010-ல் திருமணமாகி, அடுத்தடுத்த ஆண்டுகளில் இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன. காலப்போக்கில் இவர்களுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட, 2016ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். அன்றிலிருந்து இன்றுவரை, நீதிமன்றமே கதியென சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
கணவர், தனக்கும் தன்னுடைய இரண்டு குழந்தைகளுக்கும் எந்தவிதமான நிதி உதவியும் செய்யாமல் தட்டிக் கழிப்பதாக மனைவி குற்றம்சாட்டினார். மனைவி, தன்னுடைய மாமனாருக்குச் சொந்தமான மும்பை லோகந்த்வாலாவில் உள்ள 3 படுக்கையறை கொண்ட குடியிருப்பில் வசித்து வந்த நிலையில், அதைக் காலி செய்யுமாறு கணவர் தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டது.
இந்த வழக்கில், கணவர் தன் மனைவி மற்றும் உறவினர்கள்மீது மட்டுமல்லாமல், அவருக்காக வாதாடிய வழக்கறிஞர்கள் மீதும் வழக்குத் தொடர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
