தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் காங்டி அடுத்த தாமரகிட்டாவை சேர்ந்தவர் வசந்தகுமாரி. இவர் ரசோல் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார்.
இவரது கணவர் பிரபாகர். இவர் அந்த பகுதியில் உள்ள பல்வேறு நிதி நிறுவனங்களில் கடனை வாங்கிக்கொண்டு ஊரை விட்டு தப்பி ஓடிவிட்டார். கடன் கொடுத்தவர்கள் வசந்தகுமாரியிடம் பணத்தைக் கேட்டு தகராறு செய்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை வசந்தகுமாரி வழக்கம் போல் அங்கன்வாடி மையத்திற்கு வேலைக்கு சென்றார். கடன் கொடுத்தவர்கள் அங்கன்வாடி மையத்திற்கு சென்றனர்.
அங்கு வேலை செய்து கொண்டிருந்த வசந்த குமாரியை வெளியே இழுத்து வந்து மரத்தில் கயிற்றால் கட்டினர். தன்னை விடுவிக்கும்படி வசந்தகுமாரி கடன் கொடுத்தவர்களிடம் கெஞ்சினார்.
இருப்பினும் மனம் இறங்காமல் வசந்தகுமாரியை தாக்கினர். வலியால் வசந்த குமாரி அலறி துடித்தார். இவரது அலறல் சத்தம் கேட்க கிராம மக்கள் ஓடி வந்தனர்.
கிராம மக்கள் வருவதைக் கண்ட கடன் கொடுத்தவர்கள் அங்கு இருந்து தப்பி ஓடினர். கிராம மக்கள் வசந்தகுமாரியை மீட்டனர். வசந்தகுமாரி இது குறித்து போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
