“என் மனதில் என்றும் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கும் மேடை இந்தக் கல்லுப்பட்டி ஆலமர மேடைதான்” – தந்தை தங்கப்பாண்டியன் பிரசாரத்தைத் தொடங்கிய ஆலமர மேடையில் தனயன் தங்கம் தென்னரசு உணர்ச்சி பூர்வமான பிரசாரம்.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட எஸ்.கல்லுப்பட்டியில் திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு இன்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். தனது தந்தை தங்கப்பாண்டியன் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கும் பாரம்பரிய இடமான ஆலமர மேடையிலேயே அவர் பிரசாரத்தைத் மேற்கொண்டார்.
இந்த பிரசார கூட்டத்தில் பேசிய தங்கம் தென்னரசு, “எத்தனையோ பறவைகளுக்கு இருப்பிடமாகவும், கிராம மக்களுக்கு நிழலிடமாகவும் இருக்கும் இந்த ஆலமரம் எனக்கும் எப்போதும் ஒரு புகலிடமாகவே இருந்து வருகிறது. இந்த மேடை எனக்குப் புதிதல்ல. எத்தனையோ முறை இங்கு நின்று உங்களுடன் பேசியிருக்கிறேன், உரையாடியிருக்கிறேன். எஸ். கல்லுப்பட்டிக்கு நான் வெளியூர்க்காரனல்ல, இந்த ஊர்க்காரனாகவே என்னை நீங்கள் எப்போதும் பார்க்கிறீர்கள்.
என் அரசியல் பயணத்தில் இந்தியா முழுவதும், வெளிநாடுகள் வரை சென்று உரையாற்றியிருந்தாலும், என் மனதில் என்றும் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கும் மேடை இந்தக் கல்லுப்பட்டி ஆலமர மேடைதான். ஏனெனில் இது என் தந்தை மிகவும் நேசித்த இடமாகும்.
