ஆர்யா, கௌதம் ராம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மிஸ்டர்.எக்ஸ்’. இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்க விஷ்ணு விஷாலை வைத்து எஃப்ஐஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த் இயக்கியுள்ளார். திபு நிபுணன் தாமஸ் இசையமைத்துள்ள இப்படம் ஏப்ரல் 17ஆம் தேதி வெளியாகிறது. ஸ்பை ஆக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு பிப்ரவரியில் வெளியாகியிருந்தது. அதில் இந்திய உளவுத்துறை வீரர்களின் வாழ்க்கை மற்றும் தியாகங்களில் உருவான கதை என ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஒரு உளவாளி குழு நாட்டுக்கு எதிராக நடக்கும் திட்டத்தை தடுக்க போராடும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது.
இந்த நிலையில் தற்போது டிரெய்லர் வெளியாகியுள்ளது. இதில், ‘இந்த கற்பனை கதை பல்வேறு கட்டங்களில் நிகழ்ந்ததாக கூறப்படும் சம்பவங்களை இனைத்து புனையப்பட்டது என’ ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு சைலண்ட் மிஷினுக்காக வெளிநாடு செல்லும் ஆர்யா, கௌதம் கார்த்தி, சரத்குமார், மஞ்சு வாரியர் கொண்ட ஒரு ரகசிய டீம் அந்த மிஷினை வெற்றிகரமாக முடிக்கவில்லை, இதனால் இவர்கள் அனைவரின் மீதும் தேசத்துரோக சட்டம் பாய, பின்பு மீண்டும் இன்னொரு திட்டத்திற்காக ஒன்று சேர்கின்றனர். அது நிறைவேறியதா இல்லையா என்பதை குறிக்கும் வகையில் இந்த டிரெய்லர் அமைந்துள்ளது. மேலும் அந்த திட்டம் நிறைவேறவில்லை என்றால் உலகப் போர் வரக்கூடும் என எச்சரிக்கும் வசனங்களும் இடம் பெறுகிறது. பின்பு போர் சம்பந்தமான காட்சிகளும் வருகிறது.
இதனால் அதிக ஆக்ஷன் மற்றும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத வகையில் இப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் டிரெய்லர் தற்போது ரசிகர்களின் கவனத்தை பெற்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் படத்திற்காக எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
