காரைக்குடி : தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நாளை ( வெள்ளிக்கிழமை) காரைக்குடியில் பிரசாரம் செய்கிறார். இதற்காக 37 நிபந்தனைகளுடன் தேர்தல் கமிஷன் அனுமதி அளித்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் த.வெ.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, கட்சி தலைவர் விஜய், காரைக்குடியில் நாளை பிரசாரம் செய்கிறார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் மதுரை செல்லும் அவர், அங்கிருந்து சாலை வழியே காரைக்குடி செல்கிறார். புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, தேவர் சிலை முன்பு விஜய் பிரசாரம் செய்கிறார்.
பிரசாரத்திற்கு அனுமதி கோரி, த.வெ.க., சார்பில், தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட எஸ்.பி.,யிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மதியம் 12:00 மணி முதல் 2:00 மணிக்குள் பிரசாரம் செய்ய, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
* பிரசாரத்தின்போது, 20 டாக்டர்கள், 200 தன்னார்வலர்கள் ‘வாக்கி டாக்கி’யுடன் இருக்க வேண்டும்.
*இலவச பொருட்கள் வழங்கக்கூடாது.
*அனுமதியளித்த நேரத்திற்குள் பிரசாரம் செய்ய வேண்டும்.
*போக்குவரத்திற்கு இடையூறு செய்யக்கூடாது.
*கண்ணதாசன் மணிமண்டபம், மாநகராட்சி அலுவலக நுாலகம் ஆகிய அரசு கட்டடங்களுக்கு சேதம் ஏற்படக்கூடாது.
*மின்வாரிய ஊழியர்கள், தீயணைப்பு வீரர்கள் கட்டாயம் இருக்க வேண்டும்.
*முக்கியமாக, 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களை பிரசாரத்திற்கு பயன்படுத்த கூடாது என்பன உட்பட, 37 நிபந்தனைகளை, தேர்தல் அதிகாரிகள் விதித்துள்ளனர்.
இதையடுத்து, விஜய் பிரசாரம் செய்யும் இடத்தில் உள்ள மரங்களில் தொண்டர்கள் ஏறுவதைத் தடுக்கும்வகையில், மரங்களை சுற்றி, தகர ஷீட் போடப்பட்டது. அங்குள்ள டிரான்ஸ்பார்மரை சுற்றிலும் தடுப்பு அமைக்கப்பட்டது.
