புதுடில்லி: கிராமப்புறங்கள் மற்றும் தொலைதுார பகுதிகளில் தடையற்ற தொலைத்தொடர்பு சேவையை உறுதி செய்யும் நோக்கில், செயற்கைக்கோள்களில் இருந்து நேரடியாக மொபைல் போன் களுக்கு இணைப்பு வசதியை அனுமதிப்பதற்கான சாத்தியக்கூறுகளை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ‘டிராய்’ ஆராய்ந்து வருகிறது.
பிரத்யேக செயற்கைக்கோள் சேவைகளுக்கான அலைக்கற்றையை பயன்படுத்தி வழங்குவதா அல்லது 4ஜி, 5ஜி போன்ற வழக்கமான மொபைல் போன் சேவைகளுக்கான அலைக்கற்றையை பயன்படுத்தி வழங்குவதா என்பது குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் டிராய் கருத்துகளை கேட ் டுள்ளது.
இந்த நேரடி சேவை அமலுக்கு வந்தால், செயற்கைக்கோள் தொடர்பு சேவைகள் சாதாரண மொபைல் போன் சேவை வழங்குநர்களுக்கு இணையான வளர்ச்சியை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் இன்றும் சில கிராமப்புற மற்றும் தொலைதுார பகுதிகள் உரிய சேவையின்றி இருப்பதை சுட்டிக்காட்டியுள்ள டிராய், மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு அலைக்கற்றை முறைகளும் தடையற்ற இணைப்பை வழங்குவதற்கு பெரிதும் உதவும் என தெரிவித்துள்ளது.
வழக்கமான மொபைல் போன் அலைக்கற்றைகளை பயன்படுத்தி நேரடி செயற்கைக்கோள் சேவைகளை வழங்குவதற்கான தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் குறித்த முடிவு, அடுத்தாண்டு சீனாவில் நடைபெறவுள்ள உலகளாவிய வானொலி தொடர்பு மாநாட்டில் எடுக்கப்பட உள்ளது.
எனினும், பல நாடுகள் ஏற்கனவே இந்த சேவைக்கு அனுமதி அளித்துள்ளதால், இந்தியாவிலும் தாமதமின்றி இந்த சேவையை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருவதாக டிராய் தனது ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து வரும் மே 6ம் தேதிக்குள் கருத்துகளை தெரிவிக்கலாம் என டிராய் கூறியுள்ளது.
