புதுடில்லி: பண மூட்டை சிக்கிய விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா செய்தார்.
டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மா, அங்குள்ள அரசு பங்களாவில் வசித்தார் . கடந்தாண்டு அவரது இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு பணியின் போது, வீட்டில் உள்ள ஓர் அறையில், எரிந்த நிலையில் ஐநூறு ரூபாய் நோட்டுகள் மூட்டை மூட்டையாக கண்டெடுக்கப்பட்டன. பின்னர் அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு யஷ்வந்த் வர்மா மாற்றப்பட்டார்.
அவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி , லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி கூட்டணிகளின் எம்.பி.க்கள் நோட்டீஸ் அளித்தனர். இதை ஏற்ற ஓம் பிர்லா, விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டார். அதை ரத்து செய்யக்கோரி யஷ்வந்த் வர்மா தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பார்லிமென்ட் குழு விசாரணையை தொடர நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.
இதன்படி பார்லி விசாரணைக்குழு விசாரணை நடத்தியது. தற்போது குற்றச்சாட்டுகள் தொடர்பாக, ஒரு உள் விசாரணையை எதிர்கொண்டு வருகிறார். இது தொடர்பாக, பார்லிமென்டின் வாயிலாக அவரைப் பதவியிலிருந்து நீக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன. இந்த சூழலில் இன்று அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி யஷ்வந்த் வர்மா, ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் தனது ராஜினாமா கடிதத்தைச் சமர்ப்பித்துள்ளார்.
