– நமது நிருபர் –
ஜனநாயகன் திரைப்படம் வெளியாவதில் பல்வேறு சிக்கல்கள் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில், சமூக வலைதளத்தில் முழு திரைப்படமும் வெளியாகி உள்ளது.
அரசியல் மாற்றத்திற்காக திட்டமிட்டு கசிய விடப்பட்டதா அல்லது யாரேனும் திருட்டுத்தனமாக வெளியிட்டனரா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
த.வெ.க., தலைவரும், நடிகருமான விஜய் நடித்து வெளியாக தயாராகியுள்ள திரைப்படம் ஜனநாயகன் . விஜயின் கடைசி படம் என்ற அறிவிப்பால், அவரது ரசிகர்கள் மட்டுமின்றி, மக்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பு இருந்து வருகிறது. ஆனால், படம் வெளியாவதற்கு பல்வேறு சிக்கல்கள் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன.
இந்நிலையில் நேற்று, ஜனநாயகன் திரைப்படம் முழுதும் ‘டெலிகிராம்’ செயலியில் வெளியாகி, தமிழகம் முழுதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேர்தல் களத்தில் திடீர் மாற்றத்தை ஏற்படுத்த, இப்படத்தை திட்டமிட்டு வெளியிட்டுள்ளதாக, ஒரு தரப்பில் சொல்லப் படுகிறது.
ஒரு சிலர், சுயலாபத்திற்காக யாரோ ஒருவர், டெலிகிராம் செயலியில் வெளியிட்டு இருக்கலாம் என்கின்றனர்.
‘படத்தின் சில குறிப்பிட்ட காட்சிகளை சமூக வலைதளத்தில் பரவ விட்டது தி.மு.க.,வினர் தான்’ என, விஜய் கட்சி நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
மேலும், ‘இப்படக் காட்சிகளை சமூக வலைதளத்தில் பகிர்ந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சார்பில், ஜனநாயகன் படக்காட்சிகளை பகிர்ந்த நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக டி.ஜி.பி.,க்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
மேலும், விஜய் நடித்த துப்பாக்கி, பீஸ்ட் படங்களை போலவே, ஜனநாயகன் படத்திலும் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக காட்டியுள்ளதாக கூறி எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
