விதிமீறும் சார்-பதிவாளர்கள்; பட்டியல் தயாரிக்கிறது பதிவுத்துறை

சென்னை: தண்டிக்கப்பட்ட பின்னும், அங்கீகாரமில்லாத மனைகள் தொடர்பான பத்திரங்களை, பதிவு செய்யும் சார் -பதிவாளர்கள் மீது, நடவடிக்கை எடுக்க பதிவுத்துறை தயாராகி வருகிறது.

தமிழகத்தில் அங்கீகாரமில்லாத மனைகள் தொடர்பான, பத்திரங்களை பதிவு செய்ய, 2016ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இதற்கான சட்ட திருத்தம், 2017ல் அமலுக்கு வந்தது. இதனால் பெரும்பாலான ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், நகர், ஊரமைப்பு துறை அங்கீகாரத்துடன் மனைப்பிரிவு திட்டங்களை செயல்படுத்துகின்றன; இது ஒரு நல்ல மாற்றமாக பார்க்கப்படுகிறது.

பணம் செலவு செய்து மனை வாங்கும் மக்களுக்கு பயனுள்ளதாக, இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. எனினும், சில இடங்களில், அங்கீகாரமில்லாத மனைகள் தொடர்பான பத்திரங்கள், பதிவு செய்யப்படுவதாக புகார் கூறப்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்படும் புகார்கள் குறித்து, பதிவுத்துறை மேலதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

அதன் தொடர்ச்சியாக, சம்பந்தப்பட்ட சார் பதிவாளர்களை, வேறு அலுவலகங்களுக்கு இடமாற்றம் செய்து, பதிவுத்துறை உத்தரவிட்டது. அதன் பின்னும், அந்த சார் பதிவாளர்கள், அதே தவறை மீண்டும் செய்வதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து, பதிவுத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:

தமிழகத்தில், அங்கீகாரமில்லாத மனைகளின் பத்திரத்தை பதிவு செய்யக் கூடாது என, சார் பதிவாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கு தெளிவான வழிகாட்டுதல்கள் அளிக்கப்பட்டுள்ளன. எனினும், சில சார் பதிவாளர்கள், அங்கீகாரமில்லாத மனை பத்திரங்களை பதிவு செய்கின்றனர். இது தெரிய வந்ததும், அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

அவர்களில் சிலர், தங்கள் தவறை தொடர்கின்றனர். இவ்வாறு மீண்டும் தவறு செய்யும், சார் பதிவாளர்கள் குறித்து பட்டியல் தயாரிக்கப்படுகிறது. விரைவில், அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களை பதிவு இல் லாத பணிக்கு மாற்றுவது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

Source link