அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கும் யஷ்வந்த் வர்மாவின் டெல்லி வீட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீப்பிடித்தது. இதனால் தீயை அணைத்தபோது வீட்டில் சாக்குமூட்டையில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நீதிபதி லஞ்சம் வாங்கி வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து நீதிபதி வர்மா மீதான புகார் குறித்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ராஜீவ் கண்ணா கமிட்டி அமைத்து உத்தரவிட்டார். அதோடு டெல்லி உயர் நீதிமன்றத்தில் இருந்த வர்மாவை அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டார். மேலும் பணியில் இருந்தாலும் அவருக்கு எந்த வழக்கும் கொடுக்கப்படவில்லை.
ஆனால் தனக்கு இதில் எந்த வித தொடர்பும் இல்லை என்றும், தான் தவறு செய்யவில்லை என்று நீதிபதி வர்மா தெரிவித்தார். ஊழல் வழக்கில் சிக்கிய நீதிபதியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது குறித்து விசாரிக்க மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா 3 பேர் கொண்ட கமிட்டியை அமைத்தார்.
இதை எதிர்த்து நீதிபதி வர்மா சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட் அமைத்த குழுவில் இருந்த நீதிபதி ஷீல் நாகு, நீதிபதி ஜிஎஸ் சந்தவாலியா மற்றும் நீதிபதி அனு சிவராமன் ஆகியோர் அடங்கிய உள் விசாரணைக் குழு, நீதிபதி வர்மா மற்றும் அவரது குடும்பத்தினர் பணம் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் அறையை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக தெரிவித்தது.
விசாரணை அறிக்கை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதோடு பதவியில் இருந்து ராஜினாமா செய்யும்படி அறிவுறுத்தப்பட்டது. ஆனால் வர்மா தனது பதவியை ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார். பாராளுமன்றத்திலும் நீதிபதியின் பதவியை நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதோடு இது தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட கமிட்டியை சபாநாயகர் பிர்லா மாற்றியமைத்தார். அக்கமிட்டி வெள்ளிக்கிழமை முதல் விசாரணையை தொடங்க இருந்தது. ஆனால் நீண்ட இழுபறிக்கு பிறகு நீதிபதி யஷ்வந்த் வர்மா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்து இருக்கிறார்.
