சட்டமும் மாற்றமும்
2011-ல் வெளியான இந்தப் படத்தின் வெற்றி எத்தகையது என்றால், அது தென் கொரியாவின் சட்டத்தையே மாற்றி அமைத்த ஒன்றாக காணப்பட்ட வெற்றி. ‘சைலன்ஸ்டு’ படமும் வெளியான பிறகு, தென் கொரியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கான சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என்ற மக்களின் குரல் வலுக்க ஆரம்பித்தது.
மக்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று போராட்டத்தில் ஈடுபட, இந்த அழுத்தம் தாங்காமல் தென் கொரிய அரசு இந்தத் திரைப்படத்தின் தலைப்பிலேயே ‘Dogani Act’ என்ற சட்டத்தை நிறைவேற்றினர்.
இந்த ‘டொகானி சட்டம்’ என்பது வெறும் சட்ட திருத்தம் மட்டுமல்ல, அது ஒரு பெரிய மாற்றத்தின் தொடக்கம். இதற்கு முன்பு, பல வழக்குகள் கால வரம்பு காரணமாக நீதிமன்றத்தில் கூட செல்வதற்கான வாய்ப்பை இழந்துவிட, இந்த திருத்தச் சட்டத்துக்குப் பிறகு, குறிப்பாக குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் மீதான வன்கொடுமை குற்றங்களுக்கு எதிராக எந்த நேரத்திலும் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என்ற மாற்றம் ஏற்பட்டது. படம் தந்த தாக்கத்தின் விளைவால் மக்கள் வெகுண்டெழுந்து தந்த அழுத்தத்தால் இது சாத்தியமானது.
சிறுவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு தண்டனைகள் கடுமையாக்கப்பட்டன. அத்துடன், பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் குறித்து சமூகத்தில் அதிக விழிப்புணர்வு ஏற்பட்டது. ‘டொகானி லா’ என்ற இந்தச் சட்டம், ஒரு குற்றத்துக்கு எதிரான நடவடிக்கை மட்டுமல்ல, ஒரு சமூகத்தின் மனநிலையை மாற்றிய மகத்தான நிகழ்வு.
ஒரு திரைப்படம் இவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவது அரிது. ‘சைலன்ஸ்டு’ ஓர் உண்மைக் கதையை மட்டும் சொல்லவில்லை; ஒரு நாட்டு குடிமக்களை தங்களது சமூகத்தில் நடக்கும் கொடூர உண்மையை எதிர்கொள்ள வைத்தது. அந்த மக்களின் விழிப்புணர்வே சட்டத் திருத்தத்துக்கு வழிவகுத்தது.
கலை வழியே விழி திறக்குமானால், அது கலைக்கும் கலைஞனுக்கும் கிடைக்கும் வெற்றி என்பதை ‘சைலைன்ஸ்டு’ போன்ற படங்கள் நிரூபிக்கின்றன. அடர்த்தியான திரை அனுபவமும் நல்கும் இந்தப் படத்தை நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணலாம்.
