பாகிஸ்தானில் துவங்கியது அமைதி பேச்சு: ஈரான் தோல்வியடைந்த நாடு என டிரம்ப் விமர்சனம்

வாஷிங்டன்: மேற்காசிய போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமைதி பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் துவங்கியது. இதனிடையே, ஈரானை தோல்வியடைந்த நாடு என டிரம்ப் விமர்சித்துள்ளார்.

மேற்காசிய நாடான ஈரானுக்கும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டு படைகளுக்கும் இடையே நடந்து வரும் போரை நிறுத்துவதற்கான அமைதிப் பேச்சு, நம் அண்டை நாடான பாகிஸ்தானில் நடைபெறுகிறது.

இதற்காக, இரு தரப்பு குழுவினரும் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் உள்ள நுார்கான் விமான நிலையத்திற்கு தனித்தனியே வந்தடைந்தனர். அமெரிக்கா சார்பில், துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், ஜாரெட் குஷ்னர் மற்றும் ஸ்டீவ் விட்காப் உள்ளிட்டோர் வந்தனர்.ஈரான் பார்லிமென்ட் சபாநாயகர் முகமது பாகர் கலிபாப் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி உள்ளிட்ட ஈரான் குழுவினரும் வந்துள்ளனர். அவர்களை பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர் வரவேற்றார். இருவரும் தனித்தனியே, பாகிஸ்தான் பிரதமரை சந்தித்து பேசினர்.

இதனை தொடர்ந்து, அமெரிக்கா, ஈரான், பாகிஸ்தான் இடையே அமைதி பேச்சுவார்த்தை துவங்கியது. திட்டமிட்ட நே ரத்தை கடந்து 5 மணி நேரம் தாமதமாக துவங்கி நடந்து வருகிறது. பேச்சுவார்த்தை துவங்கி நடந்து வருவதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இதனிடையே, டிரம்ப் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ஈரான் தோல்வியடைந்த நாடு. அதன் ராணுவம், கடற்படை, விமானப்படை என அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டது. ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது. சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளுக்காக செய்கிறோம். இதனை தாங்களாக செய்ய அவர்களுக்கு விருப்பமில்லை. இந்த பேச்சுவார்த்தை வெற்றி பெறாவிட்டால், மீண்டும் தாக்குதல் துவங்கும் எனக்கூறியுள்ளார்.

Source link