தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி, திமுக, அதிமுக, நாதக, தவெக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் வர இன்னும் சில நாட்களே உள்ளதால் அரசியல் கட்சித் தலைவர்கள், வாக்குறுதிகளை மக்களிடம் தெரிவித்தும், மற்ற கட்சிகளை விமர்சித்தும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது.
இந்த நிலையில், திருவெறும்பூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை ஆதரித்து துணை முதல்வரும், திமுக இளைஞரணிச் செயலாலருமான உதயநிதி ஸ்டாலின் இன்று (11-04-26) வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரச்சார வாகனத்தில் நின்றபடியே உதயநிதி ஸ்டாலின் பேசத் தொடங்கிய போது, திமுக தொண்டர் ஒருவர், வாகனத்தில் ஏறி உதயநிதிக்கு மாலை அணிவித்தார். அதனை மகிழ்ச்சியோடு உதயநிதி ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார்.
அதனை தொடர்ந்து அந்த தொண்டர், உதயநிதி ஸ்டாலினுக்கும் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும் வீர வாள் கொடுத்தனர். அந்த இரு வாள்களை இருவரும் கையேந்தியபடியே தொண்டர்களிடம் காண்பித்தனர். அப்போது சுற்றிருந்த தொண்டர்கள் ஆரவாரமிட்டு உற்சாகமடைந்தனர். இதையடுத்து கீழே சுற்றிருந்த தொண்டர்கள் உதயநிதி ஸ்டாலினுக்கும், அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும் மாலைகள் வழங்கினர். அதை இருவரும் கழுத்தில் போட்டுக்கொண்டனர். இதையடுத்து தொண்டர்கள் ஆரவாரமிட்டு உற்சாக வரவேற்பளித்தனர்.
