ஈரான் – அமெரிக்கா இடையே பாகிஸ்தானில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த நிலையில், தற்போது பிரச்னைக்குரிய இடமாகக் கருதப்படும் ஹார்முஸ் நீரிணையை அமெரிக்க கடற்படை கப்பல்கள் கடந்துசென்றன. வழக்கமாக அமெரிக்கப் போர்க்கப்பல்கள் தங்களின் இருப்பிடத்தைக் காட்டும் AIS (Automatic Identification System) கருவியை அணைத்து வைத்தே இப்பகுதியைக் கடக்கும். ஆனால், இந்த முறை USS Michael Murphy மற்றும் USS Frank E. Peterson ஆகிய இரு கப்பல்களும் AIS கருவியை ஒளிரச் செய்தபடி பயணித்தன.ஈரான்- அமெரிக்காஇதுகுறித்து ராணுவ வரலாற்று ஆய்வாளர் சால்வடோர் மெர்கோக்லியானோ கூறுகையில், “கடற்படைக் கப்பலில் தவறுதலாக AIS ஆன் ஆகாது. இது திட்டமிட்டு செய்யப்பட்டது. தாங்கள் அந்தப் பகுதியைக் கடந்துவிட்டோம் என்பதை உலகுக்குக் காட்டவே அவர்கள் இதைச் செய்துள்ளனர்,” என்றார்.ஈரான் சில தினங்களுக்கு முன்பு ஹார்முஸ் நீரிணையைக் கடக்கும் புதிய வழித்தடத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தியது. மேலும், வழக்கமான பாதையில் கண்ணிவெடி இருக்கலாம் எனவும் எச்சரித்திருந்தது. இந்த நிலையில், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) வைத்த கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான பணிகளை அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தொடங்கியுள்ளது. வரும் நாட்களில் கடலுக்கடியில் இயங்கும் ட்ரோன்களும் இதில் ஈடுபடுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ட்ரம்ப் – ஹார்முஸ் ஜலசந்தி – மொஜ்தபாஇது தொடர்பாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு அட்மிரல் பிராட் கூப்பர், “வர்த்தகக் கப்பல்கள் தடையின்றிச் செல்ல புதிய வழித்தடத்தை அமெரிக்கா உருவாக்கி வருகிறது.” என்றார்.அமெரிக்காவும் ஈரானும் பாகிஸ்தானில் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ள சூழலிலேயே, அமெரிக்கப் போர்க்கப்பல்கள் இந்த நீரிணையைக் கடந்து சென்றுள்ளன. எண்ணெய் கப்பல்கள் பயணிப்பதற்கு ஈரானின் அனுமதி பெறவோ அல்லது கட்டணம் செலுத்தவோ தேவையில்லாத ஒரு பாதுகாப்பான வழிப்பாதையை அமெரிக்க கடற்படை உருவாக்கிவிட்டால், அந்தப் பேச்சுவார்த்தைகளின் போக்கு அமெரிக்காவிற்குச் சாதகமாகத் திரும்பக்கூடும்.இதன் விளைவாக, அமெரிக்கப் போர்க்கப்பல்கள் அந்த நீரிணை வழியாகப் பயணித்தபோது, ஈரானின் இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படையினர் (IRGC) அவற்றை எதிர்த்து, “சர்வதேச சட்டத்திற்கு இணங்கியே கடந்துசெல்ல வேண்டும். எங்கள் அரசு போர்நிறுத்த விதிகளுக்குக் கட்டுப்படவே விரும்புகிறது. இதுவே கடைசி எச்சரிக்கை. இராணுவக் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையைக் கடக்க முயற்சித்தால், உறுதியான மற்றும் வலுவான பதிலடி” கொடுக்கப்படும் என எச்சரித்தது.இதற்கிடையில், அமெரிக்க இராணுவம் அப்பகுதிக்கு மேலும் அதிக போர் ஆற்றலைத் தொடர்ந்து அனுப்பி வருகிறது. அமெரிக்க நீர்மூழ்கி கப்பல்மூன்றாவது விமானம் தாங்கி கப்பலும், ஆயிரக்கணக்கான கடற்படை வீரர்களும், இந்த மாத இறுதியில் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பல நீண்ட தூர பயண ஏவுகணைகளும் மத்திய கிழக்குக்கு வந்துகொண்டிருக்கின்றன.ராபிடான் எனர்ஜி நிறுவனத்தின் நிறுவனர் பாப் மெக்நாலி, “தொடர்ந்து போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தபோதிலும், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மற்றொரு இராணுவ மோதல் விரைவில் ஏற்படக்கூடும். அமெரிக்கா இரண்டாம் சுற்றுக்குத் தயாராகி வருகிறது எனக் கருதுகிறேன். அமெரிக்கா, கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கும் ஈரானின் திறனை பலவீனப்படுத்துவதால், ஈரானின் செல்வாக்கு குறையும். இந்த மாத இறுதியில் ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாக மீண்டும் திறப்பதோடு ஒரு நீடித்த போர்நிறுத்தத்திற்கான நிலைமைகள் ஏற்படக்கூடும்” எனத் தெரிவித்தார்.
