நடக்கவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அ இ அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரிப்பதென முடிவு செய்துள்ளதாம் பழ கருப்பையா தலைமையிலான தமிழ்நாடு தன்னுரிமைக் கழகம் (டிடிகே)
2023 ம் ஆண்டு இந்தக் கட்சியைத் தொடங்கிய பழ கருப்பையா தனது ஆதரவாளர்களுக்கு இது தொடர்பாக செய்தி ஒன்றை அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
அதில், ’நம்முடைய கட்சியின் முதன்மையானவர்களுடன் கலந்து பேசி இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணியை ஆதரிப்பதென்று முடிவு செய்து, எடப்பாடி பழனிசாமியிடம் ஒரு இடம் ஒதுக்கும்படி கேட்டோம்.
அதற்கு அவர், ‘நீங்கள் ஒரு இடத்தில் சிறைப்பட்டு விட வேண்டாம். தமிழகம் முழுவதும் உங்கள் பேச்சு போய்ச் சேர வேண்டும். அதற்கு நீங்கள் தமிழகம் முழுக்கச் சென்று வாருங்கள். தேர்தல் முடிந்து ஆட்சி அமைந்ததும் தகுதியான இடத்தை உங்களுக்கு வழங்குவேன்’ எனச் சொல்லியிருக்கிறார். எனவே தேர்தலுக்கு முதல் நாள் வரை அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதென முடிவெடுக்கப்பட்டுள்ளது. அங்கங்கே இருக்கும் நமது நிர்வாகிகள் அதிமுக அணியுடன் கலந்து பேசி ஆதரவு திரட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
